Sunday, May 30, 2010

பேராசிரியர்- சுச்சரித கம்லத்


பேராசிரியர்- சுச்சரித கம்லத்

தமிழில் - ஃபஹீமாஜஹான்



பேராசியர் சுச்சரித கம்லத் அவர்கள் இலங்கையின் அறிவுசார் காலாசாரத்தினுள்ளே மேலாண்மையுடைய பாத்திரமொன்றை வகிக்கும் இணையற்ற அறிஞராவார். பல்கலைக்கழக ஆசான்களில் ஒருவராக இருந்து அவர் பல்கலைக்கழகக் கல்வித் துறையில் சிறந்த சேவையைச் செய்தார். சிங்களம் , பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழித்துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற புத்திஜீவி ஒருவரான இவர் கீழைத்தேய மேலைத்தேய தத்துவங்கள் மற்றும் அழகியல்
துறையிலும் ஆற்றல்மிக்கவர். விவாதமுறைப்படி உண்மையை ஆராயும் மெய்யியல் சிந்தனைகளின் ஊடாகத் தனது திறனாய்வுகளைப் புகுத்தி பொதுவுடமைவாத திறனாய்வாளர் ஒருவராக 80களின் முற்பகுதியில் பேராசிரியர் கம்லத் அவர்கள் பிரசித்தி பெற்றிருந்ததோடு இயங்குகின்ற ஒருவராவும் திகழ்ந்தார்.

சிறந்த இலக்கியப் படைப்புக்களையும் மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு அவர் இருவழிகளில் செய்த இலக்கியச் சேவை விரிந்த பரப்பில் நோக்கப் படுகிறது. தற்கால இலக்கியம் மற்றும் திறனாய்வுத்துறை செல்நெறிகள் சார்ந்த விமரிசனங்களுடன் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் இது.



தாங்கள் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான இலக்கிய பரிச்சயம் கொண்ட திறானாய்வாளர்களில் ஒருவர். நூல்களைத் தேடிப் படிக்காத முறையான அறிதல் இல்லாத கற்றலில் இருந்து விடுபட்ட தலைமுறையொன்றிடம் இன்று இலக்கியம் கைமாறியுள்ளது. இலங்கையின் தற்கால இலக்கியங்களின் செல்நெறி தொடர்பாகத் தங்களது கருத்தைக் கூறமுடியுமா?



சுச்சரித: இலக்கியம் என்பது சமூகத்தில் உள்ள அறிவார்ந்த உரையாடல் ஒன்றாகும்.ஆனாலும் இன்று இந்தக் கலையானது முறைசார் கல்வியற்ற, மரபு ரீதியான மொழி அறிவு அற்ற, மேற்கின் மொழி அறிவில் பயிற்சியற்ற வெற்று மனிதர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் எமது சிங்கள இலக்கியம் பெருமளவு சிதைவடைந்துள்ளது.இவை அனைத்திற்கும் காரணமாக அமைவது மேல்குடி வர்க்கத்தினரின் ஆதிக்க மனோபாவங் கொண்ட செயற்பாடுகளேயாகும்.அவர்கள் திட்டமிட்டுச் செய்த கொடிய குற்றச் செயல் தான் இந் நாட்டில் காணப்பட்ட கல்வி முறையைச் சீர்குலைத்தது. ஆங்கிலக் கல்வியை நாசமறுத்ததும் பெரிய குற்றமாகும்.இன்று இலக்கியக் கலையும் திறனாய்வும் இருண்ட பாதாளமொன்றினுள் வீழ்ந்துள்ளது.இலக்கியம் என்ற பெயரில் இன்று வெளிவந்து கொண்டிருப்பவை சிந்தனைத் தொடர்பற்ற நீளுரைகள் ஆகும். புளித்துப்போன மொழியில் எழுதப்படும் இந்த நூல்களுக்குத் தங்கம், வெள்ளி , வெண்கலம் மற்றும் அரச விருதுகள் எனப் பல்வேறு பெயர்களிலான விருதுகளின் மேல் விருதுகள் வழங்கப் படுகின்றன. இதற்குள் படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள அனேகர் தனித்த தீவொன்றில் அநாதரவாக விடப்பட்ட அகதிகளைப் போன்றுள்ளனர். தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அனேக இலக்கியப் படைப்புகளில் சிறந்த சிங்கள இலக்கியங்களின் விதிமுறைகள் மற்றும் மொழி ரீதியான உள்ளார்ந்த படிமங்கள் தென்படுவதில்லை. புராதன காலத்திலிருந்து தொடர்ந்துவரும் சிறந்த இலக்கியத்திலிருந்து விலகிய தீவாந்திர இலக்கியமொன்றுதான் இன்று காணப்படுகிறது. இன்று இலக்கியத் திறனாய்வொன்று இல்லை. திறனாய்வாளர்கள் எனக்கூறப் படும் வெளியீட்டாளர்கள் கூட தரம் குறைந்த இலக்கியப் படைப்புகளை மிகைபடுத்தி்திக் கூறி அவற்றை உச்சத்துக்குக் கொண்டு சென்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எந்தவொரு திறனாய்வு தொடர்பாகவும் முறையான விதிமுறையொன்றோ தர்க்க ரீதியான வெளிப்பாடொன்றோ புலப்படுவதில்லை.முறையான தளமொன்று இன்றி நூல்களுடன் இருளுக்குள் தட்டுத்தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் இலங்கையின் இலக்கியத் துறையே இன்று குளறுபடியாகிக் கொண்டுள்ளது.



தாங்கள் இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்வியைமுறையைப் பெரிதும் குறைகாணும் பேராசிரியர்களில் ஒருவர். விஷேடமாக நாடொன்றின் சிந்தனை, பகுத்தறிவு ஆற்றலை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மையானதாகத் திகழவேண்டிய பல்கலைக்கழகக் கல்வித் துறையானது பெருமளவு பின்னடைவு கண்டுள்ளதாக எப்பொழுதும் அழுத்தமாகக் கூறிவருகிறீர்கள். அனாலும் இன்று அறிவானது ஆற்றொழுக்காகச் செல்லாமைக்குத் தாய்மொழிக் கல்வியும் பிரதான காரணமொன்றாகும் என்பது தென்படுகிறது.
இன்று பல்கலைக்கழகங்களிற் கூட இருமொழிப் புலமையுடையவர்களுக்கான வெற்றிடம் இருப்பதைக் காண்கிறோம். ஆனாலும் அக் காலத்தில் பேராசிரியர் சரத்சந்திர போன்ற அறிவாளிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக நுண்ணாய்வுகளை நிகழ்த்திப் புரட்சிகரமான பங்காற்றினர். ஆங்கிலத்தைக் கைவிட்டதும் பிரிவெனாக்களைப் பல்கலைக்கழகங்களாக மாற்றியதும் தான் இந்தக் கல்வியின் இருளடைவுக்குக் காரணம் எனத் தென்படுகிறது. இது குறித்து?




சுச்சரித:
தாய்மொழிக் கல்வி காரணமாக ஆங்கிலம் மாத்திரம் அல்ல சிங்களம் கூட இழக்கப்பட்டுள்ளது.இன்று இலங்கையின் கல்வித்துறையானது முழுமையாகவே சிதைந்து போய்க் காணப்படுகின்றது.அநேகமான பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் மானுடவியல் பீடங்கள் தொடர்பாகக் கதைக்கக் கூட எதுவுமற்ற நிலையில் உள்ளன. இந்த நாட்டின் பல்கலைகழகங்களில் உள்ள பெரும்பாலான பேராசிரியர்கள் சிங்கள மொழியைச் சரியாகக் கற்பிப்பதில்லை. இது உண்மைக்குப் புறம்பானதென்று எவரேனும் ஆட்சேபனை தெரிவிப்பார்களேயானால் அவருடன் நான் உரையாடவும் தயாராகவுள்ளேன். இன்று கல்வியானது தடையின்றிச் செல்வதற்குப் பிரதானமான காரணம் தாய்மொழிக் கல்வியாகும்.

பேராசிரியர் சரத்சந்திர போன்ற சிறந்த கல்விமான்கள் பதவி உயர்வுகளை நோக்காகக் கொண்டு நுண்ணாய்வுகளை மேற்கொள்ளவில்லை.நாடகக் கலைஞர், விமர்சகர் மற்றும் இயக்கியவாதி ஒருவராகவும் பிரகாசிக்கின்ற ஆசிரியர் ஒருவராகவும் தான் பெற்றுக் கொண்ட அறிவைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குப் பேராசியர் சரத்சந்திரர் பெரும் முயற்சிளை மேற்கொண்டார். இதனால் பல்கலைக்கழகத்தினுள்ளும் அதற்குப் புறத்தேயான சமூகத்திலும் உயர்ந்த மதிப்பீடு கொண்ட பரம்பரையொன்று உருவாகியது. ஆனாலும் இன்று பல்கலைக்கழகக் கலாநிதிகளும் பேராசிரியர்களும் காணப்படுவது நாட்டின் பொதுத்தேர்தல் ஒன்று வரும்வேளையில் ஒரு கட்சிக்கு ஆதரவாகக் கையொப்பமிடுவதற்கும் பிரத்தியேக வகுப்பு வியாபார நிலையங்களைத் திறப்பதற்குமேயாகும்.





இலங்கையின் இலக்கியத் துறையோடு தொடர்பான "லவிசாரலய" எனப்படும் பிரபந்தமானது ஒருவகையான மரபையொத்த தன்மையோடு எமக்குக் கிடைக்கின்றது.எந்தவொரு திறனாய்வாளருள்ளும் இந்த வகைமாதிரியானது அவரது பல்வேறு கருத்துக்கள் மனப்பாங்குகள் சார்ந்து வடிவமைந்துள்ளது. தங்களது திறனாய்வுக் கலையும் பெரும்பாலும் மாக்ஸிய திறனாய்வுக் கோட்பாடுகளிலேயே தங்கியிருந்தது. ஆனாலும் இன்று முன்னேற்றமடைந்துள்ள உலகத்துக்கு இசைவாக இலக்கியத் திறனாய்வுக் கலையும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் அளவுகோள்களைத் தம்முள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனுடன் ஒத்திசைவடையாமல் தாங்கள் உட்பட முன்னோடியான திறனாய்வாளர்கள் குழுவொன்று இனனும் பழைய சொதியையே கிளறிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.



சுச்சரித:
இப்போது இலங்கையில் இலக்கியத் திறனாய்வாளர்கள் இல்லை. இன்றிருப்பது திறனாய்வுக் கோமாளிகள். இந்தத் திறனாய்வுகளினூடாகத் தென்படுவது அவர்களுக்கு எந்தவொரு நுண்ணறிவு சார்ந்த பணியைச் செய்வதற்குமான அறிவோ பயிற்சியோ இல்லயென்பதே.அள்ளுண்டு வரும் புதிய கொள்கைகளுக்கு அடிமைப்படுவது பயங்கரமானது. அக்காலத்தில் எனது திறனாய்வுக் கோட்பாடுகள் யாவும் மாக்ஸியம் சார்ந்தே காணப்பட்டது. ஏதாவதொரு கலை வடிவத்திலிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் இலக்கை ஆய்ந்தறிந்து ஏதோவொரு ஒளிக்கீற்றை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கவே நான் எப்பொழுதும் முயற்சி செய்தேன்.அவ்வாறே மனிதன் மிகவும் வெற்றிகரமான மனப்பாங்குடன் வாழ்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைவதற்கு ஏதுவாகும் காரணிகள் எவை என்பதும் எனது திறனாய்வுக் கோட்பாடுகளில் காணப்பட்ட அடிப்படை விடயங்கள் எனக் கூற முடியும்.

அக்காலத்தில் மார்டின் விக்கிரமசிங்ஹ, பேராசியர் எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமரசேகர போன்ற எழுத்தாளர்கள் பண்டைய சிறந்த மொழிக்கலையை திறம் படக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அதனால் அவர்களது பெரும்பாலான படைப்புகள் தனித்துவமான எண்ணங்களாலும் கொள்கைகளாலும் நிரம்பிக் காணப்பட்டது. அனாலும் தற்கால பரம்பரையில் பெரும்பாலானவர்கள் அத்தகைய ஆழ்ந்த தன்னித்துவங்கொண்ட கருத்துக்களை முன்வைப்பவர்கள் அல்லர். அழுக்கடைந்த மொழியினால் எழுதும்,உரையாடும் அவர்களில் பெரும்பாலானோர்களிடத்தே அத்தகைய ஆற்றல்கள் இல்லை. போலியான கற்பனாவாதங்களை இரு கரம் நீட்டித் தழுவிக் கொள்வதற்கு நாங்கள் அவசரப்படத்தேவையில்லை.






தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை குறைகாணும் இயல்புடன் விமர்சனத்துக்குட்படுத்தும் தாங்களின் படைப்புகளிலும் செயற்பாட்டு பரப்புகளிலும் முக்கிய வேறுபாடுகள் தெரிவதற்கில்லை. ஆனாலும் சிங்கள, ஆங்கில, பாளி, சமஸ்கிருத மொழித்துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள காரணத்தாலேயே தங்களிடத்தே மொழி ரீதியான வலுவும் அறிவுத்துறை சார்ந்த தற்பெருமையும் காணப்படுவதாகச் சிலர் கூறுகின்றனர். அடுத்தவரை கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்வதற்கான ஆயுதமொன்றாகத் தாங்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் எனக் கருதுகிறேன். இதைப் பற்றி ?



சுச்சரித:
நான் மொழியறிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள ஒருவர். நான் எழுதுவது தேர்ச்சி பெற்ற ஒரு மொழியில். அதனால் அது தொடர்பான அபிமானம் எனக்குள்ளது. ஆனாலும் நீங்கள் முன்பு குறிப்பிட்ட அறிவுத்துறை சார்ந்த தற்பெருமை என்ற சொல் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அறிவுத்துறை சார்ந்த தற்பெருமையுள்ளவர்கள் இருப்பின் அறிவுத்துறை சார்ந்த யாசகர்களும் காணப்பட வேண்டும். எனது செயற்பாடுகள் தொடர்பாகவும் படைப்புகள் தொடர்பாகவும் நீங்கள் கேள்வியெழுப்புகிறீர்கள். நான் உலகில் வளர்ச்சியடைந்த வாசிப்புகளால் முழுமைபெற்ற கலைப்படைப்புக்களை அதிகமாக வாசித்த, அவை தொடர்பாக ஆழமாகக் கற்றறிந்த ஒருவர். ஆனாலும் உலகில் காணப்படும் எல்லாக் கழிவுகளையும் குப்பைகளையும் தலையில் போட்டுக் கொள்வதற்கான தேவை எனக்கில்லை. ஒவ்வொரு பிதற்றல்காரர்களின் திமிர்பிடித்த பேச்சுக்களால் நான் குழப்பமடையப் போவதில்லை. இன்று எல்லா இடத்திலும் இருப்பவர்கள் பிதற்றல்காரர்களே. இன்று பல்கலைக் கழகங்களில் புத்தஜீவிகள் இல்லை. இதனால் புதிய கொள்கைகள் தொடர்பாக விவாதங்கள் நிகழ்த்தவதற்கும் அறிவார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு முடியாதிருப்பது வியப்பானதல்ல. ஆனாலும் பல்கலைக்கழகத்துக்குப் புறம்பாக எழுச்சியடைந்த சுய கற்றலில் ஈடுபடும் இளம் இயக்கங்களும் குழுக்களும் கடந்த காலத்தில் பாழடைந்த வீடுகளில் பாத்திரங்களை போட்டுடைத்துக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.





நவீன கலை ,நவீன கலை வெளியீடுகளில் எப்பொழுமே கலையானது புதிய உருவமொன்றை பெற்றுக் கொள்கிறது. அப்பொழுது மரபு ரீதியான கலைகளும் மரபு ரீதியான கலை வெளியீடுகளும் மறுவாசிப்புக்குட்படுகின்றன. அத்தோடு அவற்றினூடாக புதிய கலைவடிவமொன்றுக்கான வெளியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இடம் கிடைக்கின்றது. இலங்கைக் கலைகளுக்கு இசைவாக இந்தப் பண்பு மாறுபாட்டின் வேறுபாடுகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?



சுச்சரித:
இன்று இந்த நாட்டில் கலை இலக்கியத்தையும் விடவும் திரைப்படக் கலைத்துறையில் குறிப்பிடத்தக்களவு பயனுண்டாக்கத்தக்க வளர்ச்சி அடைந்துவருதைக் காணக் கூடியதாக உள்ளது. ப்ரசன்ன விதானகே, அஷோக ஹந்தகம போன்ற இளம் திரைப்படக் கலைஞர்கள் நவீன கலையை மிகவும் ஆழ்ந்து உள்வாங்கி உயர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் சமூகத்தை நவீனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உந்துதல் பெற்றுள்ளனர். இது நல்ல போக்கொன்றாகும்.உதாரணத்திற்கு ப்ரசன்ன விதானகே நெறியாள்கையில் வெளிவந்த "ஆகாச குசும்" திரைப்படமானது சிறந்த பிரயத்தனமொன்றாகும். ஆனாலும் அது தொடர்பாக எழுதப்பட்ட ஆழமான திறனாய்வொன்றை இன்னும் காண முடியவில்லை. இது தவிர ஓவியக் கலைத்துறையில் நவீன கலை வெளிப்பாடுகளால் ஊட்டம் பெற்ற மாற்றுக் கலைவடிவங்கள் ஓரிரண்டு காணக்கிடைக்கின்றன. நவீன கலையையும் வெயியீடுகளையும் சமூகமயப்படுத்தச் சென்ற அனேகமானோரை நோக்கி எப்பொழுதும் ஏச்சுப் பேச்சுக்களும் கல்லடிகளும் பொல்லடிகளும் வந்து விழத்தொடங்கின. நீங்கள் கூறும் படியான நவீன கலை வடிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சமூகமும் நவீனமடைய வேண்டும்.





இலக்கியவாதியின் பாத்திரமானது உலகினுள் எந்த விதத்திலான வேடமொன்றை ஏற்பதில் தங்கியுள்ளது என சிலர் கேள்வியெழுபபகின்றனர். நான் அந்தக் கேள்வியைத் தங்களிடம் முன்வைக்கிறேன்

சுச்சரித:
உண்மையான இலக்கியவாதி என்பவனும் இலக்கியம் என்பதுவும் மானுட வர்க்கத்தில் வளங்களோடும் கருத்துப் பறிமாற்றங்களுடனும் மலர்ச்சியுடனும் வாழ்வதற்காக வகுப்புவாத சமூகத்திற்கும் இயற்கைக்கும் எதிராக எப்பொழுதும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனாவான் .அவன் மொழியூடாக இந்த வேதனைமிக்க போராட்டத்தை எல்லாத் தரப்பினூடாகவும் மீள் உருவாக்கம் செய்கிறான்.அவ்வாறே இந்தப் போராட்டத்தினுள் மனிதர்கள் புதிய அனுபவங்களையும் புதிய பரிமாணங்களையும் புதிய ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதைக் காண முடியும். இவை அனைத்தும் இயக்கியப் படைப்பினுள் உள்ளடங்குகின்றன.இதனால் அதனுடன் கூட்டிணைவை மேற்கொள்ளும் சுவைஞர்களின் அனுபவத்தளத்தின் எல்லைகள் விரிவடைவதற்கும் ஆரம்பிக்கின்றன.இங்கு மனிதர்கள் தமக்குச் சார்பான வெற்றிகளால் உற்சாகமும் சார்பான தோல்விகளால் மனத்துயரும் அடைகின்றனர். வகுப்புவாத எதிரிமீது பகைமை கொள்ளுதல், நண்பனிடத்தே கருணை காட்டல், பிரமாண்டமான தடைகளின் எதிரே அச்சமடைதல், வகுப்புவாத எதிரியின் சில நடவடிக்கைகளை சந்தேகத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து விடயங்களும் இலக்கியத்தினுள் தங்குதடையின்றி வருவதும் நடைபெறுகிறது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்கின்ற சுவைஞர், இரசிகர், வாசகர் எனும் தரப்பினர்களின் சிந்தனைத் தளங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவும் கூடும். இதன் படி இலக்கியத்துடன் தொடர்புகொள்கின்ற ஒருவனின் உலகில், உலகமக்களின் வாழ்வுப் போராட்டங்களையும் வாழ்வையும் மெய்ப்பாட்டு ரீதியாகத் தொட்டுணர்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இலக்கியவாதியின் வாழ்க்கையானது முழுமையானதும் ஆழமானதுமான ஒன்றாக மாறுவதினூடாக அவனது இலக்கியப் பாத்திரமும் மேம்பாட்டை நோக்கி நகரும். ஆனாலும் தற்கால இலக்கியவாதி மேற்கூறப்பட்ட அனைத்தையும் பறிகொடுத்த ஒருவனாவான்.



கடந்த தசாப்தங்களில் இலங்கையிலுள்ள புத்திஜீவிகள் இரு கூறாகப் பிரியும் போக்கினைக் காணகூடியதாக இருந்தது.இந் நாட்டில் காணப்பட்ட இனவாத யுத்தத்துக்குச் சார்பானவர்கள் என். ஜீ.ஓ. ஆனதோடு இன்னொரு குழு வெறுமனே தேசியம் ஆனார்கள். தேசிய - சர்வதேசிய என்ற அடிப்படையில் பிரிந்து கூறுபட்டதனால் மத்திய தரப் புத்திஜீவிகளது வெளி இழக்கப்பட்டுப் போனது. கோட்பாடுகள் மேலைத்தேயம் தேசியம் ஆகிய ரீதியில் பிளவுபடுவது குறித்து உமது கருத்து எத்தகையது?


சுச்சரித:
இலங்கையில் புத்திஜீவிகளுக்கிடையிலான பிரிவைப் பற்றிக் கதைப்பதைவிடவும் புத்திஜீவிகள் என்ற குழுவொன்று காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும். நான் அறிந்தவரையில் இந்த நாட்டில் புத்திஜீவிகள் அனைவரும் மறைந்து போயுள்ளனர். இனறு பல்கலைக்கழகங்களில் கூட புத்திஜீவிகளைக் காணமுடியாதுள்ளது.புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவும் ஒவ்வொருவரிடத்தேயும் விலைபோய்க் கொண்டிருக்கின்றனர். புத்திஜீவிகள் எனப்படுவோர் யார் என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

புத்திஜீவியொருவர் எப்பொழுதும் நடைமுறையிலுள்ள கோட்பாட்டுப் பிரவாகங்களுக்கு எதிராக எழுந்து நிற்கக் கூடிய ஒருவர்.அவர் சம்பிரதாயங்களை மாற்றமுறச் செய்பவர். ஆனாலும் இலங்கையில் எவ்விடத்திலும் அத்தகைய புத்திஜீவிகளைக் காண்பதற்கில்லை. 19ம் நூற்றாண்டளவில் ரஷ்யா போன்ற நாடுகளில்
அதி புத்திஜீவிகள் வாழ்ந்தனர்.அவர்களில் பெரும்பாலாவர்கள் கொள்கை விரோதிகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கோட்பாடுகளை மேற்கு மற்றும் தேசியம் என்ற ரீதியில் பிரிப்பது தவறாகும். எமது புராதன இலக்கியங்கள் கூட சர்வதேச மயப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டள்ளன.


பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர மற்றும் குணதாச அமசேகர ஆகியோர் இந்நாட்டில் உருவான சிறந்த இலக்கியகர்த்தாக்கள் எனக் கொள்ள முடியும்.சரத்சந்திரர் போலி அரசியல் சித்தாந்தங்களைப் பற்றி புதினங்களை எழுத முற்படவில்லை. ஆனாலும் குணதாச அமரசேகர அவரது கலைத்திறமைகளை மழுங்கடித்துக் கொண்டு இன்னும் போலியான சித்தாந்தங்களுக்கு ஊட்டமளிக்கும் மெய்விளக்க நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் எண்பது வயதைப் பூர்த்திசெய்த குணதாச அமரசேகர அவர்களின் இலக்கிய வகிபங்கு தொடர்பாக தங்களுக்குத் தோன்றுவதென்ன?


சுச்சரித:
குணதாச அமரசேகர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த இயக்கியவாதியொருவர்.அது தொடர்பான மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவ்வாறே எமக்கிருக்கும் சிறந்த கவிஞரும் அவரே. ஆனாலும் அவரது அண்மைக்கால படைப்புகள் தொடர்பாகத் திருப்தியடைய முடியாது. அதனூடாகப் புலப்படுவது அவரது படைப்பாற்றலின் வறுமை நிலைதான். அமரசேகரவின் அண்மைக்காலப் படைப்புகள் வெற்றியளிக்காமைக்குக் காரணம் அவரது கிராமிய கற்பனைகளே.அவர் எப்பொழுதும் கிராமத்து இளைஞனுக்குச் சுயாதீனமான கடமைகள் உண்டென்று தவறாக விளங்கிக் கொண்டார்.அமரசேகர மாக்ஸிய வாதத்தைக் கற்றறிந்த ஒருவரல்ல. மத்திய தர வர்க்கத்தின் செயல்கள் எப்பொழுதும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வால் பிடிப்பதாகும்.

கிராமிய இளைஞர்களின் சொல் செயல்களை எமக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காணக் கூடியதாக இருந்தது. 71 இன் கிளர்ச்சி, 88, 89 பயங்கரவாதம், மற்றும் எல்.ரீ.ரீ. ஈ பயங்கரவாதங்களினூடாக நன்றாக விளங்கியது. இன்று அமரசேகரவின் படைப்புகளினூடாகத் தென்படுவதும் திசைதிருப்பமொன்றாகும். ஆனாலும் இதனூடாக அமரசேகர எனப்படும் சிறந்த இலக்கியவாதியின் வரலாற்று செயற்பாடுகளைப் புறக்கணித்து விட முடியாது. எனது சிந்தனையின் படி அவரது இலக்கியப் பங்களிப்புகள் இன்னும் சரியான மதிப்பீடொன்றுக்கு உட்படவில்லை.

நன்றி: பூந்தி இணையதளம்
சஷி ப்ரபாத் ரணசிங்ஹ
Friday, December 11, 2009

வானம் ஏன் மேலே போனது?






விஜயலட்சுமி சேகரின் “வானம் ஏன் மேலே போனது?” இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.

இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப் பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.

மட்டக்களப்பு வாழ்வியலும் மொழியும் தொகுதி முழுவதும் இழையோடிக் காணப் படுகின்றது.கிழக்குடனான தொடர்பேதும் இன்றி வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இவரது தொகுதி புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.எனினும் “சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்” குறித்தும் அதன் வெளியீடுகள் குறித்தும் அறிந்திருப்போருக்கு இந்தத் தொகுதி முன்னைய அனுபவங்களின் நீட்சியாகவே தென் படும்.

தனது சுயத்தை இழக்க எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்.தான் அவமதிக்கப் படுவதையும் பிறரின் அனுதாபத்துக்குப் பாத்திரமாக அமைவதையும் ஆத்ம விசுவாசங் கொண்ட எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

“வலி” கதையின் பெண்ணும் தனது துயரத்தை வென்றுவிடப் பார்க்கிறாள். “என்ர காயத்த தவித் தடவி கத கேட்கும்.தடவக்குள்ள எல்லார்ர நகமும் காயத்தில் கீறும்.திரும்பத் திரும்ப வலிக்கும்.”

இரத்தம் வழியும் காயங்களை மூடி மறைத்துக் கொண்டு அனைவர் முன்னிலையிலும் புன்னகைத்து வாழும் பெண்களையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றுது.இங்கு காயம் ஒரு குறியீடாகவும் உள்ளது.

இன்றைய உலகில் அதிகமான நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களின் வறுமை என்பன அதிக கவனத்தைக் கோரி நிற்பவையாக உள்ளன. முதலாவதாகப் பெண் தனது வறுமைக்கு எதிராகப் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.அதே வேளையில் பருந்துகளிலிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியவளாகவும் இருக்கிறாள். பெண் தனது பொருளாதார விடுதலைக்காக எழுந்து நிற்கையில் ஆண், பல் வேறுபட்ட தொந்தரவுகளையும் துயரயங்களையும் அவள் மீதும் அவளது குழந்தைகள் மீதும் சுமத்துகிறான்.பெண்ணானவள் வறுமைக்கு எதிராகவும் அவளைச் சுற்றி நிற்கும் பிசாசுகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.ஆணிடமிருந்தே பெண்ணின் உலகுக்கு அச்சமும் இருளும் ஆற்றமுடியாத வடுக்களும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.


“அவள் நானாகி நாமாக” கதையில் வரும் பெண்னின் அவல நிலையின் முன் நாம் வார்த்தைகளையிழந்து போகிறோம்.
“எழும்பவே இயலாமல் இடுப்பெலும்பு முறிந்து திரும்பவும் தாய் நாட்டிற்கு வெறும் கையுடன் அனுப்பப் பட்ட நான், என் குழந்தை இரண்டு, நஞ்சு குடித்து இறந்த அக்காவின் குழந்தை இரண்டு இத்தனையும் சேர்த்து 76 வயது தாய்க்கு பாரமாவதில் உறைந்தே விட்டேன்”
இந்தப் பெண்ணுக்குச் சொல்ல எந்த மொழியிலாவது எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமா?

தனது தலைவிதியை ஆண் எனும் சாத்தானிடம் ஒப்புவித்துப் பின்னர் அவனால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் பட்ட பெண்ணின் வாழ்வை “கண்ணாடி வாழ்க்கை” சொல்கிறது.

“மொட்டுக்கள் மலரட்டும் 1-2” என்பன ஆணுடைய இழி செயலால் வல்லுறவுக்குள்ளாகும் பிஞ்சுகளைப் பற்றிச் சொல்கின்றன.

அவளை மட்டுமல்ல அவளது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியவளாக நித்தமும் ஆண் மிருகங்களை எண்ணிப் பயந்தவளாக பெண் வாழவேண்டியுள்ளது.

இவ்விடத்தே மாலதி மைத்ரியின் கட்டுரை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “சங்கப் பெண் கவிஞர்கள்” நூல் குறித்து “நிற் தகைக்குனர் யாரே?” என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நாடா கொன்றோ ; காடா கொன்றோ ;
அவலா கொன்றேர் மிசையா கொன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர் ;
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும் இடம் எப்படியிருற்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும்.பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க, தண்டிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட பெண்களின் கூட்டுக் குரல் இது.இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?”

பொருளாதார விடுதலை மாத்திரம் பெண்ணுக்கு நிறைவான வாழ்வைக் கொடுக்கப் போவதில்லை.அவள் சார்ந்து வாழும் ஆண் சமுகம் அவளுக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டும். ஆண் உயர்ந்த குணமுள்ளவனாக, 'மனிதனாக' மாறினால் மாத்திரமே பெண் உலகுக்கு உண்மையான விடுதலை வந்து சேரும்.
“அவளுக்கென்று…” கதையில் அவள் தன் கணவன் நல்லவனாக மாறிவிடுவான் என்று மனதிலும் உடலிலும் வடுக்கள் தாங்கி வாழ்கிறாள்.
தொடர்ந்தும் அந்த இல்லத்தை அவன் நரகமாக்கிக் கொண்டே இருக்கிறான்.இறுதியில் அவள் அந்த நரகத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
“உள்ளே சென்று சில பொருட்களை பையில் போட்டு எடுத்த படி குழந்தையை அள்ளித் தோளில் போட்டுக் கொள்கிறாள்.இவள் பார்வையின் கனம் தாங்காமல் ரகுவின் உடல் சேற்றில் படுத்த எருமை மாடு போல மறு பக்கம் புரள்கிறது.பாதம் வாசலை, வாசல் படியைத் தாண்டுகிறது.வானம் அமைதி காக்கிறது.இந்த அமைதி அடங்கிப் போதலுக்கான அறிகுறி அல்ல”
என ஆசிரியர் முடிக்கும் இடத்திலிருந்து கதையைத் தொடங்கியிருந்தால் என்ன? என்று கேட்கத் தோன்றுகின்றது.

இத்தகைய கதைகள் வழமையாகவே பெண் வீட்டைவிட்டு வெளியேறுவதுடன் முடிந்து போகின்றன.அதன் பின்னர் அவள் செல்லும் வழி எது? இடம் எது? இவளைப் போல கணவனிடமிருந்து பிரிந்து சென்ற பெண்ணுக்கு அவள் அவாவி நின்ற நிம்மதியான வாழ்வு கிடைத்ததா? சமுகம் அவளுக்கு இசைவாகி நின்றதா? நாவைத் தொங்கவிட்டவாறு அலையும் மிருகங்களிடமிருந்து தன்னையும் குழந்தையையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வாள்? இத்தகைய பெண்களைக் காப்பாற்றிடப் பெண்ணிய வாதிகளும் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளும் எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன? துயரங்களின் பதிவுகளை மட்டுமல்ல துயரங்களுக்கான தீர்வுகளையும் அவளுக்கான நம்பிக்கைகளையும் இத்தகைய படைப்புகளினு}டாக வழங்க முடியாதா?

“வானம் ஏன் மேலே போனது?” நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டிருந்தாலும் அது சொல்லும் உண்மை எல்லாப் பெண்களுக்கும் தைரியத்தை அளிக்கிறது.
“பத்து வயசுக்கு மேல நம்மளால நிமிந்து நிற்கவே முடியுதில்லயே. அதுவரைக்கும் தான் பூமிக்கும் வானத்துக்குமான உயரம்.அதுக்கு மேல தான் அறிவும் கூடயா வளருது. ஆளும் வளருது…ஆனா நம்மளோட உண்மையான வளர்ச்சிய உணர முடியாம வானம் இப்படி வளைச்சுப் போடுறாப் போல எப்பவும் முதுகுல முட்டுதே..”
வானம் மேலே போய் விட்டாலும் இன்னும் பெண்களின் நிலைமை இப்படித்தானே உள்ளது?

தொடரும் யுத்தங்களாலும் சிறுவர்களும் பெண்களுமே அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தீர்க்கமுடியா வடுக்களைச் சுமந்து வாழும் இவர்களால் சமுகமே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.யுத்தத்தில் ஒரு ஆண் கொல்லப் படும்போது அல்லது அவயவங்களை இழக்கும் போது அவன் ஒரு பெண்ணின் மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ இருக்கிறான்.அவ் வேளை அவனைச் சார்ந்து வாழும் பெண்ணும் குழந்தைகளும் அநாதரவாக விடப்படுகின்றனர்.அவ்வாறே யுத்தத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்களையும் குழந்தைகளையும் குண்டுகள், நச்சு வாயுக்கள், கண்ணிவெடிகள், வல்லுறவுகள் போன்ற பல்வேறு
(ஆண் சார்ந்த)ஆயுதங்கள் சிதைக்கும் போது அவர்களுடைய முழு ஆயுளும் வீணடிக்கப் படுகின்றது.அப்பாவிகள் மீது செத்துச் செத்து வாழும் வாழ்க்கை திணிக்கப் படுகிறது.


இவ்வாறு யுத்தம் அந்தரத்தில் விட்டுச் சென்ற சிறுவன் ஒருவனின் வாழ்வை “அந்தரத்தில்” கதை சொல்கிறது.

இவரது படைப்புகள் யாவும் அன்றாட வாழ்வின் துயரங்களில் இருந்தே வெளிப் பட்டுள்ளன.செய்யப் பட்ட கதைகளாகவோ முன்னரே தயாரித்து வைத்திருக்கும் வார்ப்புகளில் ஊற்றியெடுக்கப் பட்ட கதைகளாகவோ அன்றி துயருறும் பெண்களின் வலியைச் சொல்பவையாகவே அனேக கதைகள் அமைந்துள்ளன. “தீக்குள் தீ” , “நியாயம்” , “அவளுக்கென்று” போன்ற கதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பலராலும் எடுத்தாளப் பட்டுள்ள விடயங்களாக இருப்பதால் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் குறைகின்றது.இந்தக் கதைகள் தொகுதியில் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.சில கதைகள் குறுகி அவற்றின் மொழி இறுக்கமாகக் காணப் பட்டாலும் அவை சொல்லிச் செல்லும் விடயங்கள் மனதில் நீண்ட அதிர்வைத் தோற்றுவிக்கின்றன.

மௌனமாகவே பெண்ணின் துயரங்களைப் பார்த்துப் பார்த்து இருந்து இனியும் தாங்க முடியாமற் தானோ அந்த வானமும் தூரப் போயிற்று?

இந்தத் தொகுதியின் அட்டையும் வடிவமைப்பும் மிகவும் பின்னடைவுடன் காணப் படுகின்றது.இங்கு பிள்ளைகளுக்கான 40 பக்கப் பயிற்சிக் கொப்பிகள் கூட இதை விடவும் தரமான அட்டை மற்றும் வடிவமைப்புடன் தான் விற்பனைக்காக வருகின்றன.யுத்த நெருக்கடிக்கும் பல்வேறு தட்டுப் பாடுகளுக்கும் மத்தியில் வடக்கிலிருந்து வெளிவரும் நூல்களும் தம்மால் இயலுமான உச்ச தரத்துடனேயே வெளிவந்துள்ளன. ஆனால் அச்சுத் துறை சிறப்பாகவும் அதே வேளை மலிவாகவும் காணப் படுவதாக எமது மக்கள் கருதும் இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட இந்த நூலின் அட்டையோ போட்டோ கொப்பிப் பிரதியொன்றை ஒத்திருக்கின்றது.இதன் அட்டை மற்றும் வடிவமைப்பில் இதை விடவும் நேர்த்தியைக் கையாண்டிருக்கலாம்.புத்தகக் கடலில் அல்லது நூலகத்தில் இந்தப் புத்தகத்தின் வெளித்தோற்றத்தால் இது பார்ப்போரின் கவனத்தைவிட்டும் நழுவிப் போய்விடும் அபாயம் உள்ளது.
“பனிக்குடம் பதிப்பகம்” இந்த நூலின் செய்நேர்த்தியை விட்டுக் கவனம் வழுவியதேன்?

(மறுகா-2007 இதழுக்காக எழுதப்பட்டது)

பஹீமாஜஹான்
2007.03.04