உரையாடல்கள்

Monday, February 8, 2016

CORINNA



மேற்கின் சந்தடி மிக்க நகரொன்றில் அவள் பிறந்தாள். பெற்றோர்
தேவதையொன்றின் பெயரைத் தேடி அவளுக்குச் சூட்டினர். அவளை மாத்திரமே
பிள்ளையாகக் கொண்ட பெற்றோர் கண்ணின் மணியெனப் போற்றி அவளை வளர்த்தனர்.
                மிகத் தூய்மையான நேர்த்தியான ஆடைகளையே எப்பொழுதும் அணிவாள். சுத்தமும்,
அழகும், நாகரிகமும் மிக்கதாக அவள் வாழ்ந்த நகரிருந்தது. ஜேர்மனி
இராணுவத்தில் பயிற்சி பெற்றிருந்தபொழுதும் செஞ்சிலுவைச் சங்கமே அவளை
மிகவும் கவர்ந்திருந்தது. செஞ்சிலுவைச் சங்கத்தில் உயர் அதிகாரியாகும்
தகைமையை மிக இளம் வயதிலேயே தனது திறமையினால் பெற்றுக் கொண்டாள். இராணுவ
நடையின் மிடுக்கு அவளது அசைவுகளில் தெரிந்தது. கட்டளைகளைப்
பிறப்பித்தவாறு மிக வேகமாக நடப்பாள். சற்று உயரமான, ஒல்லியான அவளது
தோற்றத்தில் மிகப் பெரும் ஆளுமை புதைந்திருந்தது. உடன் நடக்கும் ஆண்களே
சில வேளை ஓடிச் சென்று அவளது நடையுடன் ஈடுகொடுக்க வேண்டிவரும்.
                அமெரிக்காவில் அவர்கள் இருந்த பொழுது அந்தச் சம்பவத்தைக் கேள்விப்
பட்டாள். அந்த நாட்டின் இராணுவம் பொருளாதார இலாபம் தேடித் தரும் இன்னொரு
நாட்டின் மீது பாய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. தகவல் கிடைத்த மறு
நிமிடமே இராணுவத் தலைமைப் பீடத்திற்குச் சென்று இறங்கினாள். சூடேறிய
எண்ணெய்யில் இட்ட கடுகு போல வார்த்தைகளைப் பொறிந்து தள்ளியவளாகத்
திடுதிடுவென உள்ளே நுழைந்தாள். எவராலும் எச்சக்தியாலும் அவளது
பிரவேசத்தைத் தடை செய்ய முடியாதிருந்தது. திடுமெனப் பாய்ந்து வரும் ஒரு
காட்டாறு போல உட்சென்றாள். மரியாதைக்குரிய வார்த்தைகளையோ,
சம்பிரதாயத்துக்குரிய சொற்களையோ அவள் உச்சரிக்கவே இல்லை. ஆதிக்க வெறியினை
அப்பாவி மக்களைக் கொண்டு தீர்க்க வேண்டாமென வாதாடினாள். அவர்களது
தலையசைவுகளையும் தந்திரச் சொற்களையும் நம்பாது, வில்லை விட்டுப்
புறப்பட்ட அம்பாக அந்நாட்டை விட்டு நீங்கினாள்.
                காற்றைக் கிழித்தவாறு செம்பிறைக் கொடி படபடத்திட விரைந்திடும்
வாகனத்தின் பின்னே புழுதிப் படலம் கிளம்பி எழுந்திடப் பாலைவனமொன்றினை
ஊடறுத்துச் சென்றாள். பின்னர் மலைகளால் சூழப்பட்ட கம்பீரமான நகரொன்றினுள்
பிரவேசித்தாள். மினாராக்களின் வண்ணங்களையும், புராதன நாகரிகத்தின்
சிதையாத அழகுகளையும் மாதுளம் தோட்டங்களையும் கண்டு வியந்தவாறு அந்த
நகரத்தின் அழகிய பிரதேசங்களில் எல்லாம் புகுந்து வெளிப்பட்டாள். பேரீத்த
மர நிழலில் அமர்ந்து தெளிந்த நீரோடையில் நீர் மொண்டு செல்ல வரும்
மக்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அமைதியாக வாழும் அம் மக்கள்
யாருக்கும் எத் தீங்கும் இழைத்தவர்கள் அல்லர். வனப்பு மிகு அவ் அழகிய
நகரத்தை வெகுவாக நேசித்தாள். அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந்த
நகரத்தின் சௌந்தரியங்கள் சேகரிக்கப்பட்டன.
                திடீரென அந்நகரம் சுற்றி வளைக்கப்படலாயிற்று. மக்கள் தம்
மனங்களிலெல்லாம் பயமும், பீதியும் நிரம்பலாயிற்று. அச்சமுற்ற மக்கள்
வீதிகளில் இறங்கித் தாம் செல்லும் திசை அறியாது அங்குமிங்கும்
வெருண்டோடினர். நாசகாரப் புயலொன்றினை ஏவி விட வந்த சாத்தான்களிடம் மானுட
நேயத்தை வேண்டி மன்றாடினாள் Corinna. வல்லமை கொண்ட அந்தச் சக்திகளோ
எளியோரின் பிரார்த்தனைகளையெல்லாம் துவம்சம் செய்து முன்னேறின. தமது
பாட்டில் வாழ்வையோட்டிய அப்பாவிகளிடம் தீராத் துயரங்களைத் திணித்தன. அந்
நகரத்திலிருந்த அனைத்தும் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் மண்ணோடு
கலந்தன. இறுதியில் அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந் நகரத்தை
நேசித்தோரின் நினைவுகளிலும் மாத்திரமே அந் நகரம் எஞ்சியிருந்தது. மண்
மேடாகக் காட்சியளித்த நகரத்தின் இடிபாடுகளுக்குள் அதன் புகழ் கூறிய
அனைத்தும் புதையுண்டன.
                பின்னர் அவள் நாசகாரத்தின் பிம்பங்களைச் சேகரித்தாள்.
கற்குவியலாக்கப்பட்ட தம் வீடுகளின் சிதிலங்களிடையே நின்று கதறும்
பெண்களை, கரும்புகையுடன் ஊழித் தீயெரியும் நகரத்தை, முன்னோர் தம்
கீர்த்திகளை உலகுக்குச் சொல்லிய இடங்களெல்லாம் தேடியழிக்கப் பட்டதை,
அங்கவீனமுற்று ஏதுமறியாமல் அழும் குழந்தைகளை, அபலைகளாக்கப் பட்ட
பெண்களின் அழுகுரல்களை, தன் நிலத்துக்காக உயிரைப் பலியிட்ட பின்
வீதிகளில் வீசப்பட்டுக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்களை ஒலியாய்,
காட்சியாய் உயிர் உருகும் வார்த்தைகளுடன் பதிவு செய்தாள். வெடி குண்டு,
விஷ வாயு, ஆயுதங்களென அனுப்பி வைத்த மேற்குலகின் அலங்காரங்களின் மீது
விட்டெறிந்தாள். பின்னர் காணாமற் போனாள்.
                செஞ்சிலுவைச் சங்கம் அவளைத் தேடித் தோற்றது. Corinna எங்கு சென்றாள்?
என்னவானாள்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவே இல்லை. அவளைப் பழி
தீர்க்கப் பார்த்திருந்த ஆதிக்க சக்திகள் அவளை இறந்தவர்களுள்
ஒருவராக்கிடும் முயற்சியில் ஈடுபட்டன. எல்லோரையும் நம்ப வைத்திடும்
ஆதாரங்களை முன் வைத்தன. இறுதியில் செஞ்சிலுவைச் சங்கமும் அவளுக்காக
அஞ்சலி செலுத்தியது. வெற்றுப் புதைகுழி மீது மலர்களைச் சாத்தியது.
Corinna எங்கே என்ற கேள்வி வெற்றுப் புதைகுழிக்குள் அடங்கிப் போயிற்று.
                Corinna மிகவும் சாதுரியமாகத் தன்னை உருமறைப்புச் செய்து கொண்டாள்.
ஆசிய நாடொன்றில் வாழ்ந்திடவும், மேற்குலகின் அநியாயங்களிலிருந்து அந்த
மக்களைக் காத்திடவும் தீர்மானித்து அங்கு சென்றாள். ஐரோப்பா அவளுக்காக
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க அவளோ ஆசியாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தாள்.
அந்த மக்களின் மொழியை மிக வேகமாகக் கற்றுத் தேர்ந்தாள். அடிமட்ட மக்களோடு
இணைந்து வயல் நிலங்களில் வேலை செய்தாள். மழையும் வெயிலும் சேறும்
காற்றும் வறுமையும் அவளை ஆசிய மகளாகச் செதுக்கியெடுத்தது.
                ஆசியாவின் தென்கிழக்கே வயல்வெளிகளால்  சூழப்பட்ட கிராமமொன்றில் அவன்
வாழ்ந்தான். விதவைத் தாயுடனும் சில மந்தைகளுடனும். கல்வியை
இடைநிறுத்தியிருந்தபோதும் சிந்தனைத் தெளிவுள்ள உள்ளம் அவனுக்கு இருந்தது.
                ஒரு நாள் கிழக்குலகின் எல்லா அடையாளங்களோடும் இருந்த பெண்ணொருத்தியை
மணம் புரிந்தான். அவனுடன் அவள் அந்தக் கிராமத்துக் காற்றில் மணம் பரப்பி
நடந்தாள். ஆற்றிலே நீச்சலடித்த வண்ணம் வெகுநேரம் நீராடினாள்.
வயல்வெளிகளில் மாடுகளை ஓட்டிச் சென்றாள். மேலே பறந்து செல்லும் பறவைக்
கூட்டங்களின் ஒலி தேய்ந்து மறையும் வரை அவற்றைப் பார்த்திருந்தாள்.
மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில்
கவனத்துடனேயே இருந்தாள். இனிமையுடன் அவளது நாட்கள் கழிந்தனவெனக் காண்போர்
நினைக்கும் வண்ணம் வாழ்ந்திருந்தாள்.
                ஒரு நாள் தனது சைக்கிளை வேகமாக மிதித்த வண்ணம் வீட்டை அடைந்தான்
அவ்விளைஞன். தனது மனைவியைத் தேடிய போது ஆற்றுக்கு அவள்
சென்றிருப்பதையறிந்து மிக வேகமாக ஆற்றை நோக்கி ஓடினான். குளித்து
முடிந்து அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கடைத் தெருவில் தான்
கேள்விப்பட்டவைகளையெல்லாம் அச்சத்தின் அதிர்வுடன் கூறினான்.
                திடீரென அந்த அமைதி சூழ்ந்த கிராமத்துக்கு அந்நிய மனிதர்கள்
வந்திறங்கினர். துப்பாக்கிகள் கவச வாகனங்கள் யாவும் கண்ணுக்குத் தெரியாத்
திசை வழியே நின்று திடுமெனப் பாய்ந்து வரக் காத்திருந்தன. அவனது
வாழ்விடத்தைப் பேய்கள் கூடிக் கேட்டு நின்றன.
                இளைஞன் அதிர்ந்து நடுங்கினான். தனது மந்தைகளையும் பயிர் வளர்ந்து
நிற்கும் மண்ணையும் இழக்க முடியாதென அழுதான். குளிர்ந்த காற்று வீசி
மரங்களின் இலைகளையும் பூக்களையும் சொரிந்திடச் செய்து கொண்டிருந்த மாலை
வேளையது. அவன் துயரம் மிகுந்தவனாக வீட்டின் முன்னால் ஓடிக்
கொண்டிருக்கும் நீரோடையைக் கடந்து மேலேறிச் செல்லும் தெரு வழியே
நடந்தான். அவள் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். இலைகளையுதிர்த்துப்
பூக்களை மாத்திரம் மலர வைத்த மரங்களின் கீழேயுள்ள பாலத்தின் கைப்பிடிச்
சுவர்மீது முழங்கைகளையூன்றி அடிவானை வெறித்தவாறு நின்றிருந்தான்.
தொடுவானத்தில் மலைகளின் பின்னால் மறைகின்ற சூரியனைப் பார்த்தவாறு தான்
இறந்து விடப்போவதாகக் கூறி விம்மினான். அவர்களின் கால்களின் கீழே
உதிர்ந்த பூக்களைச் சுமந்தவாறு ஆற்று நீர் சுழித்தோடியது.
                அவள் செயற்படும் தருணம் அதுவென உணர்ந்தாள். ஒன்றே ஒன்றுதான் அவள்
செய்ததெல்லாம். Corinna எடுத்து வைத்திருந்த சிதைந்த நகரத்தின் நிழற்
படங்களை, தெருவில் கொன்று வீசப் பட்ட இளைஞர் குழந்தைகளென ஒன்றன் பின்
ஒன்றாக மிக அமைதியாக அவனது விழியெதிரே நீட்டினாள். புதிய சக்தியுடன்
இளைஞன் துடித்தெழுந்தான்.
                வீசுவதற்கெனக் கைகளையும் கால்களையும் மாத்திரமே வைத்திருந்த மக்கள் படை
பலத்துடன் வந்த சக்தியிடம் எப்படிச் சண்டையிடுவது?
                அன்னையை அழைத்துச் சென்று புதிய குடிசையில் அமர்த்திய பிறகு அறுவடை
முடிந்த வயல் வெளியில் பயிரடிக் கட்டைகள் எஞ்சிய பின்னர், கடைசியாக வந்து
கூடு கட்டிய ஒரு சோடிப் பறவையும் தனது குஞ்சுகளுடன் பறந்து சென்ற பின்,
ஆற்றுக்கப்பால் மந்தைகளை ஒட்டிச் சென்ற பின்னர் அவர்கள் முகாந்திரங்
கொள்ளத் தமதிருப்பிடத்தைத் தந்தகல்வதாக ஒப்பந்தமியற்றினர்.
                ஒப்பந்தத்தின் கையெழுத்துகளில் Corinnaவினது சாயல் எப்படி வந்ததென
அதிகாரிகள் வெகுவாகக் குழம்பினர். கிழக்குலகின் வேரோடிய அடையாளங்களோடு
மாடுகளை ஓட்டிச் செல்லும் பெண்ணிடம் அவர்களின் சந்தேகங்கள் வலுவிழந்து
போயின. அவளோ அவர்களின் எதிரில் முக்காட்டினால் முகத்திரையிட்டு
எஞ்சியிருக்கும் கால இடைவெளியின் மணித்துளிகளைக் கணக்கிட்டவாறு
திரிந்தாள்.
                அவளது இல்லத்தை அவர்கள் நோட்டமிட வந்த பொழுதெல்லாம் ஒன்றில் புகையும்
அடுப்பை ஊதுகுழல் கொண்டு ஊதிக் கொண்டிருப்பாள். அன்றேல் சமையல்
பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருப்பாள். உரலிலிருந்து குற்றிய
நெல்லை முறத்திலிட்டு உமி பறக்கப் புடைத்துக் கொண்டிருப்பாள். அல்லது
கைகளில் தையலையோ, பின்னலையோ வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவளாக
அதில் ஈடுபட்டிருப்பாள். அதிர்ஷ்டம் என்னவெனில், தூர வருபவர்களைக்
காட்டிக் கொடுத்திடும்படியாக அவளது வீடமைந்திருந்தது.
                பின்னர் அவர்கள் கனவான்கள் எனக் காட்டிடப் புதிய முகமூடிகளை அணிய
ஆரம்பித்தனர். தேசிய விளையாட்டுக்களை வளர்ப்பதாகக் கூறி ஆற்றல் மிகு
இளைஞர்களை வலை வீசித் தேடலாயினர். இளைஞர்களை ஒன்று திரட்டுவதும் அவர்களது
உணர்வுகளைத் திசை மாற்றுவதுமே அவர்களது இலக்காக இருந்தது. அவர்களது
தந்திரங்களுக்குள் சிக்கி விடாமல் இளைஞர்களைக் காப்பாற்றுவது அவளுக்குப்
பெரும்பாடாயிற்று. எனினும் ஓய்ந்து விடாமற் செயற்பட்டு இளைஞர்களை ஈர்த்து
நின்ற அழிவை விட்டும் காப்பாற்றினாள்.
                அவள் அவனுக்கு விளையாட்டின் திறன்களைப் பயிற்றுவித்தாள். பதுங்கித்
தாக்குதல், தப்பித்தோடுதல், வியூகங்களையுடைத்து வெளிவரல் என எல்லாம்……
அவன் தனது தோழர்களுடன் திறன்களைப் பகிர்ந்து கொண்டான். எதிரணியை
எப்பொழுதும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றான். தலையில் நெற்றியைச்
சுற்றிக் கட்டிய பட்டியுடனும், தடிகளைக் கையிலேந்தியவளாகவும் அவள்
பயிற்றுவிக்கும் இலாவகமான காட்சியில் அவளது அடையாளங்கள் புலப்படலாயின.
அவள் மேற்குலகு தேடிக் கொண்டிருக்கும் Corinna தானேயென்பதை முதற்
தடவையாகக் கூறிய போது அவன் அதிர்ந்து போகவில்லை. அமைதியான புன்னகையுடன்
அதையவள் கூறும் வரை காத்திருந்தவனாகத் தலையசைத்தான்.
                வயது போன அன்னைக்கு எதுவுமே விளங்காத போதும் அந்தக் கிராமத்து வானில்
தோற்றம் கொடுத்த தூமகேது உரைத்த பலாபலன்களை எண்ணிச் சஞ்சலத்துடன்
இருந்தாள்.
                சண்டைக்குத் தயாரானவளாய் மருமகள் தடியுடன் நிற்பாள். கேட்டாளோ
விளையாட்டுப் பயிற்சிகளென்று சிரித்தவாறே கூறுவாள். எனினும் சட்டென
இறுக்கம் அவளது முகத்தில் நிலைகொள்ளும். தனது மகனும் மாலைப் பொழுதுகளில்
நண்பர்களுடன் கூடி அவ்வாறே செய்வான். இளைய தலைமுறையினர் மங்கலங்கள்
சூழ்ந்திட வாழ வேண்டிய குடும்ப வாழ்வைப் புறக்கணித்து விட்டமை உறுத்தலைத்
தந்த போதும் எதிலுமே தலையிடாது ஒதுங்கியிருந்தாள். கிரகணங்கள் வானில்
நிலைத்து நின்று விடுவதில்லையென்பதை அந்தத் தாய் நன்கு உணர்ந்திருந்தாள்.
                நாளுக்கு நாள் அவர்களைச் சூழப் பதற்றம் குடிகொண்டது. கவச வாகனங்கள்
அந்தக் கிராமத்தினூடாகச் சென்றுவரலாயின. பின்னர் அவை ஊருக்கு அண்மையிலேயே
நிலை கொள்ளலாயின.
                அவள் காணக் காத்திருந்த நாளை அந்த இளைஞர்களைக் கொண்டு உதயமாக்கிடும்
ஆற்றலைப் பெற்றாள். ஒரு அதிகாலைப் பொழுதில் கவச வாகனங்கள் வெடித்துச்
சிதறின. வீசுவதற்குக் கைகளையும் கால்களையும் மாத்திரமே கொண்ட
மனிதர்களிடம் அன்று ஆயுதங்களும் இருந்தன. ஒன்றுமறியாதிருந்த மக்கள் அன்று
படைபலமிக்க சேனையொன்றை அழித்துச் சிதைக்கும் வல்லமை பெற்றனர்.
வீதியெங்கும் மக்கள் இறங்கித் தம் தேசம் காத்த மகிழ்வைக் கொண்டாடினர்.
                மக்கள் எழுச்சியின் தலைவனாக அவ்விளைஞன் அடையாளங் காணப்பட்டான். அதிகார
வர்க்கம் தயாரித்து வைத்திருந்த குற்றச் சாட்டுக்களையெல்லாம் அவ்விளைஞன்
மீது அபாண்டமாகச் சுமத்தியது. மிகத் தந்திரமாக மேற்குலகின் கையாட்களின்
உதவியுடன் அவ்விளைஞன் கைது செய்யப்பட்டான். தன்னைச் சூழ்ந்து நின்ற
மக்களிடம் தனது மனைவியை விட்டுச் சென்றான்.
                Corinna முன்னெப்போதுமில்லாத கனத்த ஜோதியுடன் எரியத் தொடங்கினாள்.
சிறையின் அந்தகாரத்தை ஊடுருவிப் பிரவேசிக்கும் மெல்லிய மெல்லிய
கிரணங்களில் அந்த ஜீவ ஒளியைக் கண்டு ஆறுதல் கொண்டான் இளைஞன். ஒரு பெரும்
புரட்சியின் குரல் அவனது காதுகளில் எதிரொலித்தது.
- ஃபஹீமா ஜஹான்,
Saturday, June 2, 2012
சொற்களின் சாம்ராஜ்ஜியத்தில் குறுகிப்போயுள்ள தீவின் மொழி -


பேராசிரியர் சுச்சரித கம்லத்

 தமிழில் : ஃபஹீமாஜஹான்





இந்நாட்களில் பேராசிரியர் சிறி குணசிங்ஹ அவர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன, சிறப்பிதழ்கள் வெளியிடப்படுகின்றன என்பவற்றை அறியமுடிகிறது. நான் அவற்றைக் கண்டதில்லை.அவ்விதழ்களில் சிறந்த திறனாய்வுடைய கட்டுரைகள் வெளிவருகின்றனவா என்பதை நான் அறியேன். ஏனெனில், இக்காலத்தில் அத்தகைய இலக்கியத் தரமிக்க கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் எமது நாட்டில் அரிதாகவே உள்ளனர்.


 சிறி குணசிங்ஹ அவர்களுக்குக் கிடைக்கும் இத்தகைய கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் எனதுள்ளம் பூரிப்படைகிறது. சிறி குணசிங்ஹ அவர்கள் இந்நாட்டிற்கு மிகப் பெரிய சேவையைச் செய்தவரும், இலக்கியம் மற்றும் கலாசார பங்களிப்புகளைச் செய்தவருமாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தபோது அவர் எனது ஆசானுமாவார்.


 அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இருந்த சகல விரிவுரையாளர்களும் பல்வேறு மொழித்துறைகளிலும் முழு நிறைவான புலமைமிக்கவர்களாகக் காணப்பட்டனர். ஆனாலும் அவர்களில் அனேகமானோர் வகுப்பறைகளில் கற்பிப்பதற்காக வரும்போது முனை மழுங்கிய ஆயுதங்களைப் போன்றிருந்தனர்.அவர்கள் மத்தியில் சிறி குணசிங்ஹ கூரிய ஆயுதமொன்றினைப் போலத் திகழ்ந்தார். சமஸ்கிருத இலக்கியத்தில் எந்தவொரு படைப்பைக் கற்பித்தாலும் அந்தக் கற்பித்தலானது கூரிய அறுவைக் கத்தியொன்றினால் தாமரை மலர் இதழ்க்குவியலொன்றை அரிவதைப் போன்றிருக்கும்.


 பண்டைய பாரத உணர்ச்சிக் கலைக்கோட்பாடுகளைப் பரீட்சார்த்தரீதியில் இலக்கிய நயத்தில் பிரயோகிப்பதை முதலும் முடிவுமாக சிறி குணசிங்ஹ அவர்களிடத்திலேயே கண்ணுற்றேன்.

 அப்போது அவர் கற்பித்த நூல்களில் காளிதாசனின் மேகதூதம் நூலும் ஒன்றாகும்.

 அது புதிதாக மணமுடித்த பெண்ணைத் தண்டனையொன்றின் நிமித்தம் பிரிய நேர்ந்த கணவனொருவன் மனைவிக்குக் கள்ளத்தனமாக அனுப்பும் தூதுகொண்டு உருவான செய்யுள் இலக்கியமாகும். இதில் செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன் மேகமாகும்.


அவளைத் தேடிப் பரந்து விரிந்த பாரதத் தேசத்தின் எண்ணற்ற கிராமங்கள், துறைகள், குடியிருப்புக்கள், இராசதானிகள் கடந்து மிதந்து செல்லும் மேகத்துக்கு இடைவழியில் காடுகள், மலைகள், குன்றுகள், ஆறுகள் போன்ற இயற்கையின் செல்வங்கள் எதிர்படுகின்றன. அவை அனைத்தும் வர்ணனைக்குட்படுகின்றன. அந்த வர்ணனைகளின் எந்தவொரு வசனமும், சொல்லும், படிமமும் செய்யுளின் பிரதான உணர்ச்சியான விரக வேதனையை அழுத்திக் கூறும்வகையில் காளிதாசன் கையாண்டுள்ள விதத்தை சிறி குணசிங்ஹ அவர்கள் நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து காட்டினார். அவ்விதம் கூறும் வேளையில் உடலின் முழு நரம்பு மண்டலத்தையும் ஊடுருவிச் செல்லும் உணர்வொன்று கிளர்ந்தெழும்.


 இலக்கியத்தினூடாக அத்தகையதொரு உணர்வைப் பெற முடியுமென்பதை அதற்கு முன்னர் ஒருபொழுதும் நான் நினைக்கவே இல்லை.

 அதன்பின்னர் சமஸ்கிருத இலக்கியத்தின் ஏனைய படைப்புகளைக் கற்கும் போதும் கற்பிக்கும் போதும் நான் இத்தகைய நடைமுறையையே கையாண்டேன். மாணவர்களுக்கு இலக்கியம் கற்பிக்கப் படவேண்டியது இவ்வாறுதான். ஆனாலும், இன்று இந்நாட்டில் அத்தகைய ஆசிரியர்கள் உள்ளனரா? அத்தகைய இலக்கிய அணுகுமுறையொன்று இன்று பல்கலைக்கழகங்களில் காணப்படுகிறதா? அத்தகைய விடயங்கள் இன்றுக்கு யாருக்குத் தேவைப்படுகின்றன?


 நான் சிறி குணசிங்ஹ தொடர்பாக இத்தகைய உயர்வான மதிப்பீட்டுடன் இருந்தபொழுதும் அவருக்குக் கிடைக்கும் கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் ஆனந்தக் களிப்படைந்தாலும் சிறி குணசிங்ஹ அவர்கள் எனது கருத்துக்கள் தொடர்பாகத் தப்பபிப்பிராயம் கொண்டிருப்பது என்னுள்ளே பெரும் மனவருத்தத்தை உண்டுபண்ணுகின்றது. அந்த மனவருத்தமானது ஒரு வகையில் சிறி குணசிங்ஹ அவர்களுக்கு உளரீதியான சமனின்மை ஏற்பட்டுள்ளதோ என்பதனாலும் மற்றையது அதனால் சிங்கள இலக்கியத்துக்கு ஏற்படும் சிதைவு பற்றிய அச்சத்தினாலும் ஏற்பட்டதாகும்.


 முதலாவதாக தப்பபிப்பிராயத்துக்குப் பாத்திரமாகியுள்ள விடயம் கடந்த காலத்தில் விருது பெற்ற சுனேத்ரா ராஜகருணாநாயக வின் "பொது புருஷயா" பற்றி நான் தெரிவித்த கருத்துக்களாகும்.


 நான் அந்த நாவலை மொழியை அடிப்படையாக வைத்தே சாடினேன் என சிறி குணசிங்ஹ அவர்கள் கூறுகிறார்கள். எனது பெயரைக் கூறாமலேயே அவர் அதனைத் தெரிவிக்கிறார்.


 அந்த நூலில் மொழித் துஷ்பிரயோகமும் இலக்கணப் பிறழ்வுகளும் அனேக இடங்களில் காணப்படுகிறதென நான் கூறியது உண்மையானதே. இதற்கு முன்னர் நான் எழுதிய நான்கு கட்டுரைகளில் ஒரு கட்டுரையில், ஒரு பாகத்தில் மாத்திரமே இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.


 அதில் தவறு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. இலக்கியம் என்பது மொழியினூடாகக் கட்டியெழுப்பப்படும் ஒரு கலையாகும். கலைப் படைப்பொன்றை மதிப்பீடு செய்ய வேண்டியது அக்கலையின் நியமங்களின் அடிப்படையிலாகும் என்பது மாக்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். நான் மாக்சிய விமர்சகர்களில் ஒருவனாவேன்.


 மொழியைத் துஷ்பிரயோகம் செய்திருப்பின் இலக்கணத்தைச் சாகடித்திருப்பின் மொழிக் கலைக்கு உரித்துடைய புதினமொன்று எவ்வாறு சிறந்ததாக அமைய முடியும்?


 "பொது புருஷயா" வெற்றியளிக்காமல் போனதற்கான வேறு காரணங்களையும் நான் குறிப்பிட்டிருந்தேன். சிறி குணசிங்ஹ அவர்கள் அவை அனைத்தும் தொடர்பாக மெளனம் சாதித்தவராக எந்தக் காரணங்களையும் குறிப்பிடாமல் அந்த நூல் நல்ல நாவலொன்றாகும் எனக் கூறுகின்றார். இலக்கிய விமர்சனத்தில் எப்போது வந்து சேர்ந்த விமர்சன முறை இது?


 சிங்கள இலக்கியம் மிகவேகமாகச் சீரழிவை எதிர்கொண்டிருக்கும் இத்தகைய காலகட்டத்தில் இவ்வாறான நுண்ணாய்வற்ற கருத்துக்களை வெளியிடுவதும் சதுப்புநிலங்களை உருவாக்குவதும் குழப்பத்தில் மூழ்கியுள்ள தற்கால இலக்கியகர்த்தாக்களையும் அதனூடாக இலக்கியத்தையும் நாம் ஆபத்தில் தள்ளுவதாகும். சிறி குணசிங்ஹ அவர்களிடமிருந்து யார் தான் அத்தகையதொரு குற்றத்தை எதிர்பார்ப்பார்?


 "பொது புருஷயா" நாவலை எந்த வகையில் பார்த்த பொழுதும் அது தாழ்ந்த படைப்பொன்றாகும். குணதாச அமரசேகர அவர்கள் குறிப்பிட்டதைப் போல அதனை விருதுக்காக தேர்வு செய்தவர்கள் மந்தைகளே.


 இரண்டாவதாகத் தப்பபிப்பிராயத்துக்கு உள்ளாகியுள்ள விடயம் நான் "observer" இதழில் ரங்க சந்திரரத்ன உடன் வழங்கிய நேர்காணல் தொடர்பானதாகும்.


 வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் "அமாவதுர", "புத்சரண", "சத்தர்மரத்னாவலிய", "ஜாதக பொத" போன்ற பண்டைய சிங்கள இலக்கியத்தின் உயர்ந்த தரத்திலான படைப்புகளை முழு ஈடுபாட்டுடன் பயிலவேண்டும் என்று அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன்.அப்போது தான் அவர்களது சொல்வளம், சொல்லாட்சி என்பன வளமுடையதாக மாறும் என்பதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.


 சிறி குணசிங்க அவர்கள் இந்தக் கூற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறான புரிந்து கொள்ளலால் "அமாவதுர" மொழியில் நாவல்களைப் படைக்க வேண்டும் என நான் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவொன்றிலேயே இதனை வெளிப்படுத்தினார். இந்தத் தகவலை என்னிடம் கூறியவர்கள் பிழையற்ற தகவலையே தந்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன்.


 "அமாவதுர" மொழியில் புதினங்களைப் படைக்க வேண்டும் எனக் கூறக் கூடியவர் அதி முட்டாளாகவே இருக்க வேண்டும். நான் முட்டாளாக இருக்கலாம். ஆனால் அதி முட்டாள் அல்ல என நினைக்கிறேன்.


 மார்டின் விக்கிரமசிங்ஹ, எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமர சேகர ஆகிய எழுத்தாளர்கள் மிக வளமான, மிக அலங்காரமான, மிகக் கவர்ச்சிமிக்க மொழியில் தமது படைப்புகளை எழுதியதன் காரணம் அவர்களிடம் காணப்பட்ட சொல்லாட்சிகளில் அத்தகைய இலட்சணங்கள் காணப்பட்டதாலாகும். அவர்கள் அத்தகைய தன்மைகளை அடையப் பெற்றது மேற்கூறிய நூல்களை முழு ஈடுபாட்டுடன் பயின்றதனால் ஆகும்.


 இக்காலத்தைய அனேக எழுத்தாளர்கள் உயிர்ப்பற்ற, அழுக்கடைந்த, வறிய, இலக்கணவழுவுள்ள (தூய்மையற்ற) சிங்கள மொழியில் எழுதக்காரணம் அவர்கள் "அமாவதுர" போன்ற நூல்களில் பரிச்சயமற்றவர்களாக இருப்பதனாலேயே. அவர்களின் மொழி வறியது, யாசகமானது, அழுக்கடைந்தது, உயிர்ப்பற்றது. இதற்கான காரணம் சௌந்தர்யமான மொழி தானாகவே வந்து சேராமையேயாகும். அது பிரயத்தனமெடுத்துப் பயிற்சி பெறவேண்டியது. இவர்கள் அதைச் செய்யவில்லை.அதனால் இத்தகையோர் தொடர்ந்தும் வறிய மொழியிலேயே எழுதுகின்றனர். அவற்றுக்காக விருதுகளையும் பெறுகின்றனர்.


 பண்டைய இலக்கியக் கோட்பாட்டாளர்கள் சுந்தரமான மொழியொன்றின் பத்து குணாம்சங்களைப் பட்டியற் படுத்தியுள்ளனர்.

 அவை பின்வருமாறு:

 1சொல்லாடல்: (மிருதுவான தன்மை, தட்டுத்தடுமாற்றம் இல்லாத தன்மை)

 2.மனநிறைவு- நயம் பாராட்டுதல்: ( இலகுவாகப் பொருள் விளங்குதல், வாசிக்கும் பொழுது உள்ளத்தில் உறைதல்)

 3. திடகாத்திரம் :(முரணான சொற்களின்மை, ஆற்றொழுக்கான நடை)

 4.மனக்கிளர்ச்சி: (காதல், சோகம், துயரம் ஆகிய உணர்வுகள், மன உணர்ச்சிகள் வெளிப்படல், அது பூத்துக் குழுங்கிய மலர்த்தோட்டத்தில் நுழைந்த வண்டுகளைப் போல, வாசகர்களைக் கிளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இருத்தல்)

 5.இனிமை:( வாசிக்கும் வேளை பசிய தளிர்கள் நிரம்பியதும் விதம் விதமான மலர்கள் உள்ளதும் தேன் குடித்துக் கிறக்கமடைந்த வண்டுகள் இரைச்சலிடுவதும் பல்வேறு பறவைகள் குரலெழுப்புவதுமான வனமொன்றினூடாகச் செல்வதைப் போன்ற உணர்வு தோன்றல்)

 6.விளக்கம் -தெளிவு : ( எதிர்பார்க்கும் பொருள் இயல்பாகவே வெளிப்படல்)

 7.தாராளத் தன்மை: (ஆக்கத்தின் தோற்றக் கவர்ச்சியான தன்மை காணப்படல். படிக்கும் போது தானிருக்கும் இடத்திலிருந்து உயரே எழல்)

 8.ஆற்றல்- வலிமை :( மொழியின் உயிராற்றல், ஜீவ சக்தி, உயிர்ப்பான தன்மை)

 9.அழகு: (படைப்பு முழுதும் பரம்பியுள்ளதும் அழகிய பெண்ணின் அங்கம் பூராகவும் பரந்து செல்லும் வசீகரத்தைப் போன்றதுமான தன்மை)

 10.ஒரு முகப்படுத்தல் (ஒரு மையப் படுத்தல்) :(ஒரு பொருளின் பண்பை பிறிதொரு பொருளில் காணல். மலர் கண்விழிக்கும் - மலர் உறங்கும் எனபதைப் போன்றது. இங்கு உயிர் உள்ளவர்களின் செயலை உயிரற்றவைகளிடத்தே காணல்)

 தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளில் இத்தகைய பண்புகளைக் காண முடிகிறதா?


 "அமாவதுர" போன்ற படைப்புகளில் இத்தகைய பண்புகள் காணப்படுகின்றன.அவற்றைப் படிக்கின்ற வளர்ந்துவருகின்ற எழுத்தாளனுக்கு அதன் பண்புகள் இயல்பாகவே தொற்றிக் கொள்ளும்.


 அனேக நூல்களை வாசித்து, உலகை உற்று நோக்கி, புலமைமிக்கவர்களோடு பழகி அடிமனத்தில் கட்டியெழுப்பப்பட்ட அதிகளவான சொற் திரளைக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் எழுத அல்லது பேச ஆரம்பிக்கும் போது அந்தச் சொற் திரட்டுக்கள் தானாகவே ஊற்றெடுத்து வரத் தொடங்கும். எழுத்தாளன் சுயபடைப்பாற்றலைக் கொண்டிருப்பவனாயின் சிந்தனையாளன் ஒருவனாக இருப்பின் இடத்திற்குத் தகுந்த சொல், அமைப்பு, வெளிப்பாடு, அலங்காரம் என்பன இயல்பாகவே அவனிடத்தேயிருந்து வெளிப்படும்.

 அத்தகைய ஒருவன் சொற்களை ஆள்பவனாக, வசீகரமிக்க சொற்களைக் கொண்ட ஒருவனாகக் கருதப்படுவான்.

9ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆனந்த வர்தனா எனும் பெயருடைய தத்துவஞானி இவ்வாறு கூறியுள்ளார். (http://en.wikipedia.org/wiki/Anandavardhana - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம் -மொ.ர்)

 "ஆய்ந்தோய்ந்து புனையும் போது சுயபடைப்பாற்றலைக் கொண்டிருக்கும் கவிஞனிடம் அவனிடத்தே தேங்கிய நிலையிலுள்ள மிகச் சிரமமான சொற்கள், கருத்துக்கள், அலங்காரங்கள் போன்றன 'நான் முந்தி நான் முந்தி' எனப் போட்டிபோட்டுக்கொண்டு பாய்ந்துவரும்."

 போதிய சொற்களைத் தன்னகத்தே கொண்டிராத வறிய எழுத்தாளனுக்கு அத்தகைய சொற்களும் பண்புகளும் எவ்வாறு வரக்கூடும்?


 அதே நூற்றாண்டில் வாழ்ந்த அபினவகுப்த என்பவர் பின்வருமாறு கூறினார். (http://en.wikipedia.org/wiki/Abhinavagupta - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம்- மொ.-ர்)

 "படைப்பாற்றல் என்பது முன்னர் இல்லாத அபூர்வ விடயங்களைப் படைக்கும் ஞானமாகும்.அதனிலும் விஷேடமாகப் பல்வேறு சுவைகளும் உள்ளடங்கிய உரைநடை, செய்யுள், காவியங்கள் படைக்கும் ஆற்றலாகும்."

 சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவனுக்கும் இத்தகைய ஆற்றல் அமையப் பெற முடியுமா?

 இவ்வாறு இயல்பாகவே வந்துதிக்கும் சொற்கள், வெளிப்பாடுகள், அலங்காரங்கள் போன்றவற்றிலிருந்து இது பொருத்தமானது இது பொருத்தமற்றது என்பதை வேறுபடுத்திக் கொள்ளக் கூடிய புத்திக்கூர்மையுடன் படைக்கப்படும் உரைநடை அல்லது செய்யுள் "இனிய காவியங்கள்" என அடையாளங் காணப்பட்டு்ள்ளதாக குன்தக-kunthaka எனும் பெயருடைய இலக்கிய ஞானியொருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இனிய காவியங்களின் இயல்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


 "வாட்டமடையாத புத்துணர்ச்சியான படைப்பாற்றலுடன் தோன்றிய புதிய ஓசைகளாலும் புத்துயிர்ப்பான சொற்களாலும் வடிவமைந்தவை: களிப்பூட்டும் அலங்காரமுடையவை: அவையும் இயல்பாகவே வந்து சேர்ந்தவை: மனோபாவங்களும் உலக நியதிகளும் அவற்றின் மூல இயல்பைச் சிதைவடையச் செய்யாமல் புலப்படுபவை:இலக்கிசய் சுவைகள் அவற்றின் இலட்சியத்தைக் கண்டடைவதில் திடமாக இருப்பவை: இவை அனைத்தும் அதைப் படிக்கும் வாசகனைக் கவிஞனுடன் மனதால் இனிய உரையாடலில் ஈடுபட வழிவகுப்பவை.ஏதேனுமொரு வசீகரம் இருப்பின் அது படைப்பினூடாகவே வெளிப்பட்டதாக இருக்கும். இந்தக் காவியப்பாதை இனிய பாதை என்ற பெயருடையது. மலர்கள் மலர்ந்திருக்கும் கானகமொன்றினூடாகச் செல்லும் வண்டுகளைப் போல நல்ல கவிஞர்கள் பயணிப்பது இந்தப் பாதையினூடாகும்."


 "குத்தில காவ்ய", "யசோதராவத" , "வெத்சன்தர ஜாதகய", "மளகிய எத்தோ", " மளவுன்கே அவுருது தா" போன்றன இவ்வர்த்தத்தில் இனிய காவியங்களாகும்.

 வாசிப்பறிவில்லாத சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவர்களால் அத்தகைய காவியங்களைப் படைத்திட முடியுமா?


 இதனால் தான் "அமாவதுர" போன்றவற்றை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கற்றறிந்திட வேண்டும் எனக் கூறினேன்.


 இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளை இறைவனே வந்து தந்ததைப் போல ஒரு நூல் கிடைத்துள்ளது. அதனைப் பாகிஸ்தானில் வாழும் எனது நண்பரான நிஹால் ஷஹீட் அனுப்பிவைத்துள்ளார். நூலின் பெயர் Empires of the word என்பதாகும்.


 அதன் ஆசிரியர் ஆங்கிலேயரான நிக்கலஸ் ஒஸ்ட்லர் என்பவராவார். கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் உட்பட மொழித்துறையில் ஆரம்ப பட்டத்தைப் பெற்ற அவர் அமெரிக்காவின் M.I.T.நிறுவனத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அங்கு அவரின் ஆசிரியராக நோம் சோம்ஸ்க்கி இருந்தார். ஒஸ்ட்லர் 26 மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.தனது மொழியை மாத்திரம் உயர்வென்று கூறி ஏனையமொழிகளை இகழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் சில மூடர்களுக்கு இது அதிர்வை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். ஒஸ்ட்லர் சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் உலகெங்கிலும் பரந்து சென்றடைந்த விதத்தை உள்ளத்தில் பதியும் வண்ணம் விபரிக்கின்றார். மொழியின் உயர்ந்த சக்தி என்பது அவர் அதற்கிட்டுள்ள தலைப்பாகும். அவர் சமஸ்கிருத மொழியின் அடிப்படை அழகின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறார்.


 கி.பி. 3வது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்து மதத்தின் வேத நூலொன்றான "ரிக் வேதத்" திலிருந்து பின்வருமாறு ஒஸ்ட்லர் எடுத்துக் காட்டுகிறார்.

 விழி இருந்தும்
அனேகர்
சொற்களைக் காண்பதில்லை


 செவி இருந்தும்
 அனேகர்
சொற்களைக் கேட்பதில்லை

 எனினும் பிறிதொருவனுக்கு
அது தோன்றக்கூடும்
வசீகரமிக்க மங்கையொருத்தி
தனது கணவனை நோக்கிச்
செல்வதைப் போல



 அவ்வாறு தோற்றமளிக்கப் போவது நூல்களைக் கற்றவனுக்கே அன்றி வாசிக்காத அற்பர்களுக்கு அல்ல.


 மேலும் அவர் தத்துவக் கவிஞரான பவபூதி யின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.


 வளையல்களை அணிந்து மனிதன்
அலங்கரித்துக் கொள்ள மாட்டான்
 நிலவு போலப் பிரகாசிக்கும் ஆரங்கள் அணிவதையோ
 வாசனைத் திரவியங்கள் தெளித்துக் கொள்வதையோ மலர்வளையங்களையும் கிரீடங்களையும்
 சூடிக்கொள்வதையோ செய்யமாட்டான்
அவனை மெய்யாகவே அழகுபடுத்துவது
 தூய செம்மைமிக்க மொழியேயாகும்


 ஆனாலும் இலங்கையின் இலக்கிய விருதுகளுக்குப் பேச்சுவழக்கில் உள்ள மொழியே போதுமென மூடர்கள் கூறுகின்றனர். இத்தகைய விருதுகளை வழங்குபவர்களைவிடவும் இன்றைய இலக்கியத்தின் எதிரிகள் வேறுயாருமில்லை.

 இந்து மதத்தின் இன்னொரு வேத நூலான "அதர்வண வேதம்" பின்வருமாறு கூறுகிறது.

 எனது உணவையும் நீரையும்
உன்னத மொழியையும்
 எவனொருவன்
அழிப்பதற்கு விளைவானோ


 இடியின் கடவுளே
தீயின் கடவுளே
அச்சந்தரும் பேரோசைகளெழுப்பி
எறிகணைகளைக் கரமேந்தி
 ஓங்கியடித்துச் சிதைத்திடு அவனை



 நன்றி: Rasanjalee - 2010 .05 .09


  நன்றி கலைமுகம் இதழ்-53:April-June 2012