Saturday, June 2, 2012
சொற்களின் சாம்ராஜ்ஜியத்தில் குறுகிப்போயுள்ள தீவின் மொழி -


பேராசிரியர் சுச்சரித கம்லத்

 தமிழில் : ஃபஹீமாஜஹான்





இந்நாட்களில் பேராசிரியர் சிறி குணசிங்ஹ அவர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன, சிறப்பிதழ்கள் வெளியிடப்படுகின்றன என்பவற்றை அறியமுடிகிறது. நான் அவற்றைக் கண்டதில்லை.அவ்விதழ்களில் சிறந்த திறனாய்வுடைய கட்டுரைகள் வெளிவருகின்றனவா என்பதை நான் அறியேன். ஏனெனில், இக்காலத்தில் அத்தகைய இலக்கியத் தரமிக்க கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் எமது நாட்டில் அரிதாகவே உள்ளனர்.


 சிறி குணசிங்ஹ அவர்களுக்குக் கிடைக்கும் இத்தகைய கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் எனதுள்ளம் பூரிப்படைகிறது. சிறி குணசிங்ஹ அவர்கள் இந்நாட்டிற்கு மிகப் பெரிய சேவையைச் செய்தவரும், இலக்கியம் மற்றும் கலாசார பங்களிப்புகளைச் செய்தவருமாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தபோது அவர் எனது ஆசானுமாவார்.


 அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இருந்த சகல விரிவுரையாளர்களும் பல்வேறு மொழித்துறைகளிலும் முழு நிறைவான புலமைமிக்கவர்களாகக் காணப்பட்டனர். ஆனாலும் அவர்களில் அனேகமானோர் வகுப்பறைகளில் கற்பிப்பதற்காக வரும்போது முனை மழுங்கிய ஆயுதங்களைப் போன்றிருந்தனர்.அவர்கள் மத்தியில் சிறி குணசிங்ஹ கூரிய ஆயுதமொன்றினைப் போலத் திகழ்ந்தார். சமஸ்கிருத இலக்கியத்தில் எந்தவொரு படைப்பைக் கற்பித்தாலும் அந்தக் கற்பித்தலானது கூரிய அறுவைக் கத்தியொன்றினால் தாமரை மலர் இதழ்க்குவியலொன்றை அரிவதைப் போன்றிருக்கும்.


 பண்டைய பாரத உணர்ச்சிக் கலைக்கோட்பாடுகளைப் பரீட்சார்த்தரீதியில் இலக்கிய நயத்தில் பிரயோகிப்பதை முதலும் முடிவுமாக சிறி குணசிங்ஹ அவர்களிடத்திலேயே கண்ணுற்றேன்.

 அப்போது அவர் கற்பித்த நூல்களில் காளிதாசனின் மேகதூதம் நூலும் ஒன்றாகும்.

 அது புதிதாக மணமுடித்த பெண்ணைத் தண்டனையொன்றின் நிமித்தம் பிரிய நேர்ந்த கணவனொருவன் மனைவிக்குக் கள்ளத்தனமாக அனுப்பும் தூதுகொண்டு உருவான செய்யுள் இலக்கியமாகும். இதில் செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன் மேகமாகும்.


அவளைத் தேடிப் பரந்து விரிந்த பாரதத் தேசத்தின் எண்ணற்ற கிராமங்கள், துறைகள், குடியிருப்புக்கள், இராசதானிகள் கடந்து மிதந்து செல்லும் மேகத்துக்கு இடைவழியில் காடுகள், மலைகள், குன்றுகள், ஆறுகள் போன்ற இயற்கையின் செல்வங்கள் எதிர்படுகின்றன. அவை அனைத்தும் வர்ணனைக்குட்படுகின்றன. அந்த வர்ணனைகளின் எந்தவொரு வசனமும், சொல்லும், படிமமும் செய்யுளின் பிரதான உணர்ச்சியான விரக வேதனையை அழுத்திக் கூறும்வகையில் காளிதாசன் கையாண்டுள்ள விதத்தை சிறி குணசிங்ஹ அவர்கள் நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து காட்டினார். அவ்விதம் கூறும் வேளையில் உடலின் முழு நரம்பு மண்டலத்தையும் ஊடுருவிச் செல்லும் உணர்வொன்று கிளர்ந்தெழும்.


 இலக்கியத்தினூடாக அத்தகையதொரு உணர்வைப் பெற முடியுமென்பதை அதற்கு முன்னர் ஒருபொழுதும் நான் நினைக்கவே இல்லை.

 அதன்பின்னர் சமஸ்கிருத இலக்கியத்தின் ஏனைய படைப்புகளைக் கற்கும் போதும் கற்பிக்கும் போதும் நான் இத்தகைய நடைமுறையையே கையாண்டேன். மாணவர்களுக்கு இலக்கியம் கற்பிக்கப் படவேண்டியது இவ்வாறுதான். ஆனாலும், இன்று இந்நாட்டில் அத்தகைய ஆசிரியர்கள் உள்ளனரா? அத்தகைய இலக்கிய அணுகுமுறையொன்று இன்று பல்கலைக்கழகங்களில் காணப்படுகிறதா? அத்தகைய விடயங்கள் இன்றுக்கு யாருக்குத் தேவைப்படுகின்றன?


 நான் சிறி குணசிங்ஹ தொடர்பாக இத்தகைய உயர்வான மதிப்பீட்டுடன் இருந்தபொழுதும் அவருக்குக் கிடைக்கும் கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் ஆனந்தக் களிப்படைந்தாலும் சிறி குணசிங்ஹ அவர்கள் எனது கருத்துக்கள் தொடர்பாகத் தப்பபிப்பிராயம் கொண்டிருப்பது என்னுள்ளே பெரும் மனவருத்தத்தை உண்டுபண்ணுகின்றது. அந்த மனவருத்தமானது ஒரு வகையில் சிறி குணசிங்ஹ அவர்களுக்கு உளரீதியான சமனின்மை ஏற்பட்டுள்ளதோ என்பதனாலும் மற்றையது அதனால் சிங்கள இலக்கியத்துக்கு ஏற்படும் சிதைவு பற்றிய அச்சத்தினாலும் ஏற்பட்டதாகும்.


 முதலாவதாக தப்பபிப்பிராயத்துக்குப் பாத்திரமாகியுள்ள விடயம் கடந்த காலத்தில் விருது பெற்ற சுனேத்ரா ராஜகருணாநாயக வின் "பொது புருஷயா" பற்றி நான் தெரிவித்த கருத்துக்களாகும்.


 நான் அந்த நாவலை மொழியை அடிப்படையாக வைத்தே சாடினேன் என சிறி குணசிங்ஹ அவர்கள் கூறுகிறார்கள். எனது பெயரைக் கூறாமலேயே அவர் அதனைத் தெரிவிக்கிறார்.


 அந்த நூலில் மொழித் துஷ்பிரயோகமும் இலக்கணப் பிறழ்வுகளும் அனேக இடங்களில் காணப்படுகிறதென நான் கூறியது உண்மையானதே. இதற்கு முன்னர் நான் எழுதிய நான்கு கட்டுரைகளில் ஒரு கட்டுரையில், ஒரு பாகத்தில் மாத்திரமே இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.


 அதில் தவறு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. இலக்கியம் என்பது மொழியினூடாகக் கட்டியெழுப்பப்படும் ஒரு கலையாகும். கலைப் படைப்பொன்றை மதிப்பீடு செய்ய வேண்டியது அக்கலையின் நியமங்களின் அடிப்படையிலாகும் என்பது மாக்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். நான் மாக்சிய விமர்சகர்களில் ஒருவனாவேன்.


 மொழியைத் துஷ்பிரயோகம் செய்திருப்பின் இலக்கணத்தைச் சாகடித்திருப்பின் மொழிக் கலைக்கு உரித்துடைய புதினமொன்று எவ்வாறு சிறந்ததாக அமைய முடியும்?


 "பொது புருஷயா" வெற்றியளிக்காமல் போனதற்கான வேறு காரணங்களையும் நான் குறிப்பிட்டிருந்தேன். சிறி குணசிங்ஹ அவர்கள் அவை அனைத்தும் தொடர்பாக மெளனம் சாதித்தவராக எந்தக் காரணங்களையும் குறிப்பிடாமல் அந்த நூல் நல்ல நாவலொன்றாகும் எனக் கூறுகின்றார். இலக்கிய விமர்சனத்தில் எப்போது வந்து சேர்ந்த விமர்சன முறை இது?


 சிங்கள இலக்கியம் மிகவேகமாகச் சீரழிவை எதிர்கொண்டிருக்கும் இத்தகைய காலகட்டத்தில் இவ்வாறான நுண்ணாய்வற்ற கருத்துக்களை வெளியிடுவதும் சதுப்புநிலங்களை உருவாக்குவதும் குழப்பத்தில் மூழ்கியுள்ள தற்கால இலக்கியகர்த்தாக்களையும் அதனூடாக இலக்கியத்தையும் நாம் ஆபத்தில் தள்ளுவதாகும். சிறி குணசிங்ஹ அவர்களிடமிருந்து யார் தான் அத்தகையதொரு குற்றத்தை எதிர்பார்ப்பார்?


 "பொது புருஷயா" நாவலை எந்த வகையில் பார்த்த பொழுதும் அது தாழ்ந்த படைப்பொன்றாகும். குணதாச அமரசேகர அவர்கள் குறிப்பிட்டதைப் போல அதனை விருதுக்காக தேர்வு செய்தவர்கள் மந்தைகளே.


 இரண்டாவதாகத் தப்பபிப்பிராயத்துக்கு உள்ளாகியுள்ள விடயம் நான் "observer" இதழில் ரங்க சந்திரரத்ன உடன் வழங்கிய நேர்காணல் தொடர்பானதாகும்.


 வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் "அமாவதுர", "புத்சரண", "சத்தர்மரத்னாவலிய", "ஜாதக பொத" போன்ற பண்டைய சிங்கள இலக்கியத்தின் உயர்ந்த தரத்திலான படைப்புகளை முழு ஈடுபாட்டுடன் பயிலவேண்டும் என்று அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன்.அப்போது தான் அவர்களது சொல்வளம், சொல்லாட்சி என்பன வளமுடையதாக மாறும் என்பதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.


 சிறி குணசிங்க அவர்கள் இந்தக் கூற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறான புரிந்து கொள்ளலால் "அமாவதுர" மொழியில் நாவல்களைப் படைக்க வேண்டும் என நான் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவொன்றிலேயே இதனை வெளிப்படுத்தினார். இந்தத் தகவலை என்னிடம் கூறியவர்கள் பிழையற்ற தகவலையே தந்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன்.


 "அமாவதுர" மொழியில் புதினங்களைப் படைக்க வேண்டும் எனக் கூறக் கூடியவர் அதி முட்டாளாகவே இருக்க வேண்டும். நான் முட்டாளாக இருக்கலாம். ஆனால் அதி முட்டாள் அல்ல என நினைக்கிறேன்.


 மார்டின் விக்கிரமசிங்ஹ, எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமர சேகர ஆகிய எழுத்தாளர்கள் மிக வளமான, மிக அலங்காரமான, மிகக் கவர்ச்சிமிக்க மொழியில் தமது படைப்புகளை எழுதியதன் காரணம் அவர்களிடம் காணப்பட்ட சொல்லாட்சிகளில் அத்தகைய இலட்சணங்கள் காணப்பட்டதாலாகும். அவர்கள் அத்தகைய தன்மைகளை அடையப் பெற்றது மேற்கூறிய நூல்களை முழு ஈடுபாட்டுடன் பயின்றதனால் ஆகும்.


 இக்காலத்தைய அனேக எழுத்தாளர்கள் உயிர்ப்பற்ற, அழுக்கடைந்த, வறிய, இலக்கணவழுவுள்ள (தூய்மையற்ற) சிங்கள மொழியில் எழுதக்காரணம் அவர்கள் "அமாவதுர" போன்ற நூல்களில் பரிச்சயமற்றவர்களாக இருப்பதனாலேயே. அவர்களின் மொழி வறியது, யாசகமானது, அழுக்கடைந்தது, உயிர்ப்பற்றது. இதற்கான காரணம் சௌந்தர்யமான மொழி தானாகவே வந்து சேராமையேயாகும். அது பிரயத்தனமெடுத்துப் பயிற்சி பெறவேண்டியது. இவர்கள் அதைச் செய்யவில்லை.அதனால் இத்தகையோர் தொடர்ந்தும் வறிய மொழியிலேயே எழுதுகின்றனர். அவற்றுக்காக விருதுகளையும் பெறுகின்றனர்.


 பண்டைய இலக்கியக் கோட்பாட்டாளர்கள் சுந்தரமான மொழியொன்றின் பத்து குணாம்சங்களைப் பட்டியற் படுத்தியுள்ளனர்.

 அவை பின்வருமாறு:

 1சொல்லாடல்: (மிருதுவான தன்மை, தட்டுத்தடுமாற்றம் இல்லாத தன்மை)

 2.மனநிறைவு- நயம் பாராட்டுதல்: ( இலகுவாகப் பொருள் விளங்குதல், வாசிக்கும் பொழுது உள்ளத்தில் உறைதல்)

 3. திடகாத்திரம் :(முரணான சொற்களின்மை, ஆற்றொழுக்கான நடை)

 4.மனக்கிளர்ச்சி: (காதல், சோகம், துயரம் ஆகிய உணர்வுகள், மன உணர்ச்சிகள் வெளிப்படல், அது பூத்துக் குழுங்கிய மலர்த்தோட்டத்தில் நுழைந்த வண்டுகளைப் போல, வாசகர்களைக் கிளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இருத்தல்)

 5.இனிமை:( வாசிக்கும் வேளை பசிய தளிர்கள் நிரம்பியதும் விதம் விதமான மலர்கள் உள்ளதும் தேன் குடித்துக் கிறக்கமடைந்த வண்டுகள் இரைச்சலிடுவதும் பல்வேறு பறவைகள் குரலெழுப்புவதுமான வனமொன்றினூடாகச் செல்வதைப் போன்ற உணர்வு தோன்றல்)

 6.விளக்கம் -தெளிவு : ( எதிர்பார்க்கும் பொருள் இயல்பாகவே வெளிப்படல்)

 7.தாராளத் தன்மை: (ஆக்கத்தின் தோற்றக் கவர்ச்சியான தன்மை காணப்படல். படிக்கும் போது தானிருக்கும் இடத்திலிருந்து உயரே எழல்)

 8.ஆற்றல்- வலிமை :( மொழியின் உயிராற்றல், ஜீவ சக்தி, உயிர்ப்பான தன்மை)

 9.அழகு: (படைப்பு முழுதும் பரம்பியுள்ளதும் அழகிய பெண்ணின் அங்கம் பூராகவும் பரந்து செல்லும் வசீகரத்தைப் போன்றதுமான தன்மை)

 10.ஒரு முகப்படுத்தல் (ஒரு மையப் படுத்தல்) :(ஒரு பொருளின் பண்பை பிறிதொரு பொருளில் காணல். மலர் கண்விழிக்கும் - மலர் உறங்கும் எனபதைப் போன்றது. இங்கு உயிர் உள்ளவர்களின் செயலை உயிரற்றவைகளிடத்தே காணல்)

 தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளில் இத்தகைய பண்புகளைக் காண முடிகிறதா?


 "அமாவதுர" போன்ற படைப்புகளில் இத்தகைய பண்புகள் காணப்படுகின்றன.அவற்றைப் படிக்கின்ற வளர்ந்துவருகின்ற எழுத்தாளனுக்கு அதன் பண்புகள் இயல்பாகவே தொற்றிக் கொள்ளும்.


 அனேக நூல்களை வாசித்து, உலகை உற்று நோக்கி, புலமைமிக்கவர்களோடு பழகி அடிமனத்தில் கட்டியெழுப்பப்பட்ட அதிகளவான சொற் திரளைக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் எழுத அல்லது பேச ஆரம்பிக்கும் போது அந்தச் சொற் திரட்டுக்கள் தானாகவே ஊற்றெடுத்து வரத் தொடங்கும். எழுத்தாளன் சுயபடைப்பாற்றலைக் கொண்டிருப்பவனாயின் சிந்தனையாளன் ஒருவனாக இருப்பின் இடத்திற்குத் தகுந்த சொல், அமைப்பு, வெளிப்பாடு, அலங்காரம் என்பன இயல்பாகவே அவனிடத்தேயிருந்து வெளிப்படும்.

 அத்தகைய ஒருவன் சொற்களை ஆள்பவனாக, வசீகரமிக்க சொற்களைக் கொண்ட ஒருவனாகக் கருதப்படுவான்.

9ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆனந்த வர்தனா எனும் பெயருடைய தத்துவஞானி இவ்வாறு கூறியுள்ளார். (http://en.wikipedia.org/wiki/Anandavardhana - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம் -மொ.ர்)

 "ஆய்ந்தோய்ந்து புனையும் போது சுயபடைப்பாற்றலைக் கொண்டிருக்கும் கவிஞனிடம் அவனிடத்தே தேங்கிய நிலையிலுள்ள மிகச் சிரமமான சொற்கள், கருத்துக்கள், அலங்காரங்கள் போன்றன 'நான் முந்தி நான் முந்தி' எனப் போட்டிபோட்டுக்கொண்டு பாய்ந்துவரும்."

 போதிய சொற்களைத் தன்னகத்தே கொண்டிராத வறிய எழுத்தாளனுக்கு அத்தகைய சொற்களும் பண்புகளும் எவ்வாறு வரக்கூடும்?


 அதே நூற்றாண்டில் வாழ்ந்த அபினவகுப்த என்பவர் பின்வருமாறு கூறினார். (http://en.wikipedia.org/wiki/Abhinavagupta - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம்- மொ.-ர்)

 "படைப்பாற்றல் என்பது முன்னர் இல்லாத அபூர்வ விடயங்களைப் படைக்கும் ஞானமாகும்.அதனிலும் விஷேடமாகப் பல்வேறு சுவைகளும் உள்ளடங்கிய உரைநடை, செய்யுள், காவியங்கள் படைக்கும் ஆற்றலாகும்."

 சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவனுக்கும் இத்தகைய ஆற்றல் அமையப் பெற முடியுமா?

 இவ்வாறு இயல்பாகவே வந்துதிக்கும் சொற்கள், வெளிப்பாடுகள், அலங்காரங்கள் போன்றவற்றிலிருந்து இது பொருத்தமானது இது பொருத்தமற்றது என்பதை வேறுபடுத்திக் கொள்ளக் கூடிய புத்திக்கூர்மையுடன் படைக்கப்படும் உரைநடை அல்லது செய்யுள் "இனிய காவியங்கள்" என அடையாளங் காணப்பட்டு்ள்ளதாக குன்தக-kunthaka எனும் பெயருடைய இலக்கிய ஞானியொருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இனிய காவியங்களின் இயல்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


 "வாட்டமடையாத புத்துணர்ச்சியான படைப்பாற்றலுடன் தோன்றிய புதிய ஓசைகளாலும் புத்துயிர்ப்பான சொற்களாலும் வடிவமைந்தவை: களிப்பூட்டும் அலங்காரமுடையவை: அவையும் இயல்பாகவே வந்து சேர்ந்தவை: மனோபாவங்களும் உலக நியதிகளும் அவற்றின் மூல இயல்பைச் சிதைவடையச் செய்யாமல் புலப்படுபவை:இலக்கிசய் சுவைகள் அவற்றின் இலட்சியத்தைக் கண்டடைவதில் திடமாக இருப்பவை: இவை அனைத்தும் அதைப் படிக்கும் வாசகனைக் கவிஞனுடன் மனதால் இனிய உரையாடலில் ஈடுபட வழிவகுப்பவை.ஏதேனுமொரு வசீகரம் இருப்பின் அது படைப்பினூடாகவே வெளிப்பட்டதாக இருக்கும். இந்தக் காவியப்பாதை இனிய பாதை என்ற பெயருடையது. மலர்கள் மலர்ந்திருக்கும் கானகமொன்றினூடாகச் செல்லும் வண்டுகளைப் போல நல்ல கவிஞர்கள் பயணிப்பது இந்தப் பாதையினூடாகும்."


 "குத்தில காவ்ய", "யசோதராவத" , "வெத்சன்தர ஜாதகய", "மளகிய எத்தோ", " மளவுன்கே அவுருது தா" போன்றன இவ்வர்த்தத்தில் இனிய காவியங்களாகும்.

 வாசிப்பறிவில்லாத சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவர்களால் அத்தகைய காவியங்களைப் படைத்திட முடியுமா?


 இதனால் தான் "அமாவதுர" போன்றவற்றை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கற்றறிந்திட வேண்டும் எனக் கூறினேன்.


 இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளை இறைவனே வந்து தந்ததைப் போல ஒரு நூல் கிடைத்துள்ளது. அதனைப் பாகிஸ்தானில் வாழும் எனது நண்பரான நிஹால் ஷஹீட் அனுப்பிவைத்துள்ளார். நூலின் பெயர் Empires of the word என்பதாகும்.


 அதன் ஆசிரியர் ஆங்கிலேயரான நிக்கலஸ் ஒஸ்ட்லர் என்பவராவார். கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் உட்பட மொழித்துறையில் ஆரம்ப பட்டத்தைப் பெற்ற அவர் அமெரிக்காவின் M.I.T.நிறுவனத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அங்கு அவரின் ஆசிரியராக நோம் சோம்ஸ்க்கி இருந்தார். ஒஸ்ட்லர் 26 மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.தனது மொழியை மாத்திரம் உயர்வென்று கூறி ஏனையமொழிகளை இகழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் சில மூடர்களுக்கு இது அதிர்வை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். ஒஸ்ட்லர் சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் உலகெங்கிலும் பரந்து சென்றடைந்த விதத்தை உள்ளத்தில் பதியும் வண்ணம் விபரிக்கின்றார். மொழியின் உயர்ந்த சக்தி என்பது அவர் அதற்கிட்டுள்ள தலைப்பாகும். அவர் சமஸ்கிருத மொழியின் அடிப்படை அழகின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறார்.


 கி.பி. 3வது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்து மதத்தின் வேத நூலொன்றான "ரிக் வேதத்" திலிருந்து பின்வருமாறு ஒஸ்ட்லர் எடுத்துக் காட்டுகிறார்.

 விழி இருந்தும்
அனேகர்
சொற்களைக் காண்பதில்லை


 செவி இருந்தும்
 அனேகர்
சொற்களைக் கேட்பதில்லை

 எனினும் பிறிதொருவனுக்கு
அது தோன்றக்கூடும்
வசீகரமிக்க மங்கையொருத்தி
தனது கணவனை நோக்கிச்
செல்வதைப் போல



 அவ்வாறு தோற்றமளிக்கப் போவது நூல்களைக் கற்றவனுக்கே அன்றி வாசிக்காத அற்பர்களுக்கு அல்ல.


 மேலும் அவர் தத்துவக் கவிஞரான பவபூதி யின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.


 வளையல்களை அணிந்து மனிதன்
அலங்கரித்துக் கொள்ள மாட்டான்
 நிலவு போலப் பிரகாசிக்கும் ஆரங்கள் அணிவதையோ
 வாசனைத் திரவியங்கள் தெளித்துக் கொள்வதையோ மலர்வளையங்களையும் கிரீடங்களையும்
 சூடிக்கொள்வதையோ செய்யமாட்டான்
அவனை மெய்யாகவே அழகுபடுத்துவது
 தூய செம்மைமிக்க மொழியேயாகும்


 ஆனாலும் இலங்கையின் இலக்கிய விருதுகளுக்குப் பேச்சுவழக்கில் உள்ள மொழியே போதுமென மூடர்கள் கூறுகின்றனர். இத்தகைய விருதுகளை வழங்குபவர்களைவிடவும் இன்றைய இலக்கியத்தின் எதிரிகள் வேறுயாருமில்லை.

 இந்து மதத்தின் இன்னொரு வேத நூலான "அதர்வண வேதம்" பின்வருமாறு கூறுகிறது.

 எனது உணவையும் நீரையும்
உன்னத மொழியையும்
 எவனொருவன்
அழிப்பதற்கு விளைவானோ


 இடியின் கடவுளே
தீயின் கடவுளே
அச்சந்தரும் பேரோசைகளெழுப்பி
எறிகணைகளைக் கரமேந்தி
 ஓங்கியடித்துச் சிதைத்திடு அவனை



 நன்றி: Rasanjalee - 2010 .05 .09


  நன்றி கலைமுகம் இதழ்-53:April-June 2012