Monday, September 21, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்




(பகுதி-2)
படிமம், குறியீடு இல்லாத கவிதைகளைப் புதுக் கவிதைகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

படிமம், குறியீடு என்பன பற்றி நான் இப்போது சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் புதுக் கவிதைக்கு மட்டுமன்றி மரபுக் கவிதைக்கும் படிமம் அடிப்படை என்பது பெறப்படும். குறியீடும் ஒருவகைப் படிமமே என்ற வகையில் இரு வகைக் கவிதையிலும் அதுவும் ஒரு வெளிப்பாட்டு முறையாக இருக்கலாம். உவமை, உருவகம் , குறியீடு போன்ற படிம வகைகள் ஒவ்வொரு கவிதையிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவை எதுவும் இல்லாமல் நேர் படிமங்களால் மட்டுமே ஒரு நல்ல கவிதை அமைய முடியும்.



யதார்த்தவாதம் என்றால் என்ன? உதாரணம் ஒன்றைக் கூறமுடியுமா?


யதார்த்தவாதம் என்பது ஒரு கலைக் கோட்பாடு. இதை ஆங்கிலத்தில் Realism என்பர். இதைப்பற்றி மிகச் சுருக்கமாக விளக்குவது என்பது எளிதல்ல. ஆயினும், நடைமுறை வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு கலை இலக்கியப் படைப்புகளில் சித்திரித்தல் என அதன் சாராம்சத்தைக் கூறலாம். இக்கலைக் கோட்பாடு மேலைநாடுகளில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தான் வளர்ச்சியடைந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றத்துக்கும் இக்கலைக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது இன்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. நவீன புனைகதை இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதைகளிலேயே இது முதல் முதல் வெளிப்பட்டது. டால்ஸ்டாய், தாத்தாவேஸ்கி, மாக்ஸிம் கார்க்கி போன்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இக்கோட்பாடு உச்சநிலை அடைந்தது என்பர். கவிதையில் யதார்த்தவாதத்தின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். தமிழில் மஹாகவியின் 'சடங்கு', 'கோடை', 'ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்', 'நீலாவணனின் பாவம் வாத்தியார்', என்னுடைய 'நிலம் எனும் நல்லாள்' போன்ற கவிதைகளை யதார்த்தவாதக் கவிதைக்கு உதாரணமாகக் காட்டலாம்.




இயற்பண்புவாதம் என்றால் என்ன? உதாரணத்துக்கு ஒரு கவிதையைச் சொல்வீர்களா?



யதார்த்தவாதம் போல் இதுவும் ஒரு கலை இலக்கிய கோட்பாடு தான். ஆங்கிலத்தில் இதனை Naturalism என்பர். நடைமுறை வாழ்க்கையை அப்படியே உளளது உள்ளபடி சித்திரிப்பதை இது குறிக்கும். பிரான்ஸிய நாவலாசிரியர் எமிலி ஜோலாவின் நாவல்களை இயற்பண்புவாதத்துக்குச் சிறந்த உதாரணங்களாக மேலை நாட்டு விமர்சகர்கள் கூறுவர். எனினும், யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்பு வாதத்துக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது அல்லது பெரிதும் கற்பிதமானது என்றே எனக்குத் தோன்றுகின்றது. எந்த ஒரு படைப்பாளியும் உள்ளதை உள்ளவாறே சித்திரிப்பது என்பது சாத்தியமல்ல. புகைப்படத்தில் கூட இது சாத்தியமில்லை. எனினும் ஒரு வாழ்க்கை நிலைமையைச் சித்திரிக்கும் ஒரு படைப்பாளி இந்த நிலைமை ஏன் இவ்வாறு இருக்கின்றது? இதற்கான காரணிகள் யாவை? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காணக் கூடிய முறையில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். இதே வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கும் பிறிதொரு படைப்பாளி இது இவ்வாறு தான் இருக்கும், இது இவ்வாறு இருப்பதுதான் இயற்கையானது என வலியுறுத்தும் வகையில் அப்படைப்பை உருவாக்க முடியும். இந்த வேறுபாட்டை யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்புவாதத்துக்கும் இடையிலான வேறுபாடாகக் குறிப்பிடலாம். எனினும், இந்த வேறுபாடு நிலையானதல்ல. வாசகனின் வாசிப்பை- புரிதலைப் பொறுத்து மாறுபடக் கூடும். உதாரணமாக, ஒரு இயற்பண்புவாத நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் யதார்த்தவாத நாவலாக வாசிக்க முடியும். அதாவது ஒரு யதார்த்த நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் இயற்பண்புவாத நாவலாக வாசிக்க முடியும். உதாரணமாக, புதுமைப்பித்தனின் பொன்னகரம், ஒருநாள் கழிந்தது ஆகிய சிறுகதைகளை இரு வகைகளிலும் ஒருவர் வாசிக்க முடியும். இதனால் தான் இவ்விரு கொள்கைகளுக்குமிடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது என்றேன். கவிதையில் இயற்பண்புவாதத்துக்கு உதாரணம் தேடுவது சிரமம். எனினும், நீலாவணனின் 'வேளாண்மை' ஒரு பொருத்தமான உதாரணமாகத் தோன்றுகின்றது. அதையே யதார்த்தவாதக் கவிதைக்கும் உதாரணமாகக் கூறுவேன்.



கற்பனாவாதம் என்றால் என்ன? இத்தகைய கவிதையொன்றைச் சொல்வீர்களா?



Romanticism எனும் ஆங்கிலப் பதத்துக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் தமிழ்ப் பதம் இது. இதனை யதார்த்தவாதத்துக்கு எதிர்நிலையானது எனலாம். நடைமுறை யதார்த்தத்தில் இருந்து விலகி, மிகைப்படுத்தப் பட்ட, முற்றிலும் புனைவியல் பாங்கான கலை முறையை இது குறிக்கும். ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு கலைக் கோட்பாடு இது. சிந்தனையை விட உணர்ச்சியையும், மனிதனால் உண்டாக்கப்பட்டவற்றையும் விட இயற்கை வனப்பையும் இக்கலைக் கோட்பாடு முதன்மைப் டுத்துகிறது. அழகை ஆராதித்தல் இதன் முக்கிய அம்சமாகும். ஏனைய இலக்கிய வடிவங்களைவிட கவிதையில் இதன் ஆதிக்கம் அதிகமாகும். வில்லியம் வேட்ஷ்வேத், வால்ட்விட்மன்,ஷெல்லி, கீற்ஸ் ஆகியோர் பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கற்பனாவாதக் கவிஞர்களாவர். தமிழில் பாரதியிலும் பாரதிதாசனிலும் அவருடைய வாரிசுகளிடத்திலும் கற்பனாவாத்ததின் செல்வாக்கைக் காணலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே கற்பனாவாதக் கவிதைகளுக்கு நல்ல உதாரணங்களாகும்.


இதில் எதை அல்லது எவற்றைத் தற்போதைய இலங்கைக் கவிஞர்கள் கையாள்கிறார்கள்?


இதில் ஒன்றைத் தனித்துக் குறிப்பிட முடியாது. கவிதையைப் பொறுத்த வரை இன்று இவையெல்லாம் தனித்தனிக் கோட்பாடுகளாகச் செயற்படுவதாகக் கூறமுடியவில்லை. இவை எல்லாவற்றின் செல்வாக்கும் வெவ்வேறு அளவில் கவிஞர்களிடத்தில் செயற்படுவதாகத் தான் தோன்றுகின்றது. கற்பனாவாதம், யதார்த்தவாதம் ஆகியவற்றின் கலவையைப் பல கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது. சோலைக்கிளியின் கவிதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.


தலித் என்பது எந்த மொழியிலிருந்து வந்த சொல்? தலித் இலக்கியம் என்றால் என்ன?


இது மராட்டி மொழிச் சொல் என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக சாதிகாரணமாக ஒடுக்கப்பட்டவர்களைச் சுட்ட இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. தலித் இலக்கியம் என்பது சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய, அவர்களின் விமோசனம், விடுதலை பற்றிய இலக்கியமாகும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இந்திய மொழிகள் பலவற்றில் தலித் இலக்கியம் பெருவளர்ச்சி பெற்றள்ளது.



இலங்கையில் தலித் இலக்கியத்தில் உள்ளடக்கக் கூடிய படைப்புகள் உள்ளனவா?


நிறைய உள்ளன. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற சொல் பிரபலமாக முன்னரே, 1950 களின் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் இத்தகைய இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்பன படைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவை தலித் இயக்கியம் என அழைக்கப்படவில்லை.பொதுவாக, முற்போக்கு இலக்கியம் என்றே அழைக்கப் பட்டன.கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கம்,தெணியான் போன்ற பலர் இத்தகைய இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.



ஈழத்து இலக்கியத்தில் பஞ்சமர் இலக்கியம் பற்றிப் பேசப்படுகிறதே, இதைப்பற்றிச் சற்று விளக்க முடியுமா?


தலித் இலக்கியம், பஞ்சமர் இலக்கியம் இரண்டும் ஒன்று தான். பஞ்சமர் என்பது, தலித் என்பது போல் சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினரைச் சுட்டும் ஒரு யாழ்ப்பாண வழக்குச் சொல்லாகும். யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை விட சாதிப் பாகுபாடும் சாதி ஒடுக்கு முறையும் அதிகம். அவ்வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இத்தகைய இலக்கியங்கள் அதிகம் எழுந்தன.



தற்கால யுத்த சூழ்நிலையில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளதாகப்பொதுவாக உணரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இலக்கிய உலகில் ஈழத்து இலக்கியத்துக்கு எத்தகைய இடத்தைப் பெற்றுத் தரும் என நீங்கள் கருதுகிறீர்கள்?


கடந்த சுமார் இருபது தசாப்தங்களில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளது என்பது உண்மைதான்.இன முரண்பாடும் யுத்தமும் தொடரும் சூழலில் சமூக ரீதியான அடக்கு முறை தீவிரமடைவதும், தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் எனபன தீவிரமாகப் பாதிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நிகழும்போது இலக்கியம் இந்த நிலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாதது. உலகமெங்கும் இத்தகைய சூழல் நிலவும் நாடுகளிலெல்லாம் இதனைக் காண்கிறோம். இதற்கு இலங்கை விலக்கல்ல. சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் , தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன மீறப்படுவதற்கு எதிராகவும் குரல்கொடுக்கும் இத்தகைய இலக்கியத்தை எதிர்ப்பு இலக்கியம் (Protest literature) என அழைப்பர். மூன்றாம் உலக நாடுகளான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் இன்றைய இலக்கியம் பெரிதும் எதிர்ப்பு இலக்கியமேயாகும். பலஸ்தீன இலக்கியம் இதற்கு நல்ல உதாரணமாகும். இன்றைய ஈழத்து இலக்கியம் இந்த நெறியிலேயே செல்கின்றது.

மூன்றாம் உலகின் எதிர்ப்பு இலக்கியத்தில் ஈழத்து இலக்கியத்துக்கும் குறிப்பாகக் கவிதை இலக்கியத்துக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் என்றே கருதுகிறேன்.


இலக்கிய உலகில் 'நவீனத்துவம்' என்ற குறிப்பிடுகிறார்களே, நவீனத்துவம் என்பது பற்றி விளக்குவீர்களா?


தமிழ் இலக்கிய உலகில் நவீனத்துவம் என்ற சொல் ஒரு திட்டவட்டமான பொருளில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் Modernity, Modernism ஆகிய சொற்கள் வழக்கில் உள்ளன.இவை இரண்டும் பொருளில் வேறுபட்டவை. Modernity என்பது தற்காலத்துக்குரியது, புதுமையானது, பாரம்பரிய மரபு வழியிலிருந்து வேறுபட்டது என்ற பொருள் தரும். இதனை நவீனத்துவம் எனலாம். Modernism என்பது இந்த நூற்றாண்டின் முன் அரைவாசியில், குறிப்பாக இரண்டு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கு நாடுகளில் தோன்றிய ஒரு கலாசாரக் கொள்கையாகும். கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம் போன்ற துறைகளில் புதிய வெளிப்பாடடு வடிவங்களைத் தேடிய, அவற்றைத் தத்துவ ரீதியாக நியாயப் படுத்திய ஒரு கலாசாரக் கொள்கையாக நாம் இதனை விளக்கலாம். இக் கொள்கையை நவீனவாதம் எனத் தமிழில் கூறுவது பொருத்தமாகும். ஆயினும், நவீனத்துவம் என்ற சொல்லாலேயே இவ்விரண்டையும் நாம் சுட்டுகிறோம். அதனால் சில மயக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நவீனவாதம், நவீனத்துவம் என்பவற்றுக்கிடையே உறவு உண்டு எனினும் இவை இரண்டும் வேறுபட்டவை.

மேற்கு நாடுகளில் நவீனத்துவம் கைத்தொழிற் புரட்சியோடு ஆரம்பிக்கின்றது. கைத்தொழிற் புரட்சி பாரம்பரிய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பைப் பெரிதும் மாற்றியமைத்தது. சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்கியது. அரசியல், நீதித்துறை, ஒழுக்கவியல், தத்துவம் ஆகியவற்றில் இது பெரு மாற்றங்களைக் கொண்டு வந்தது. கலை இலக்கியத் துறைகளிலும் புதிய பொருள், புதிய வடிவங்கள் என்பன தோன்றின. இவை பழைய மரபுகளிலிருந்து (Tradition) பெருமளவு மாற்றமடைந்த நவீனத்துவத்தின் சில முக்கிய அம்சங்களாகும். தமிழில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நவீனத்துவத்தின் அம்சங்கள் வெளிப்படத் தொடங்கின. ஆங்கிலேயர் இங்கு அறிமுகப்படுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவுகளே இவை. இலக்கியத் துறையில் நவீனத்துவத்தின் வெளிப்பாடாக 19ம் நூற்றாண்டின் இறுதியில் நாவல்கள் தோன்றின.பாரதியின் வருகையோடு கவிதையில் நவீனத்துவம் அறிமுகமாகியது. அதே காலப் பகுதியில் சிறுகதை இலக்கியம் தோன்றியது. கலை இலக்கியத்தில் யதார்த்தவாதம் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மேலைத் தேய முதலாளித்துவ சமூகங்களில் ஏற்பட்ட துரித வளர்ச்சியும் சிக்கல்களும் கலை இலக்கியத்தில் நவீனவாதச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. யதார்த்தவாதப் போக்கிலிருந்து வேறுபட்ட imagism, cubism, surrealism போன்ற கலைமுறைகள் தோன்றின. நவீன ஓவியம் (modern art), புதுக்கவிதை (new poetry) போன்றவையும் நவீனவாதத்தின் வெளிப்பாடுகளேயாகும். கடந்த கால் நூற்றாண்டுக்குச் சற்று அதிகமான காலப்பகுதியில் மேற்குலகில் பண்பாட்டுத் துறையில் பின்னவீனவாதம் (Post Modernism) பற்றிப் பேசப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழிலும் இதன் தாக்கத்தைக் காண்கிறோம்.



பின்னவீனவாதத்தின் முனைப்பான அம்சங்கள் எவை எனக்கூறுவீர்களா?


பின்னவீனவாதம் அலசியல், தத்துவம், பண்பாடு போன்ற பல துறைகளிலும் இதுவரை வலுவுடன் விளங்கிய கொள்கைகள் எல்லாவற்றையும் கேள்விக்கிடமாக்குகின்றது. உலகளாவிய கொள்கைகள் என்று எவையும் இருக்க முடியாது எனக் கூறுகின்றது. அவற்றையெல்லாம் பெருங்கதையாடல் (Mata narative) என்று நிராகரித்து விடுகின்றது. குழுத் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இலக்கியத் துறையில் பிரதிக் கோட்பாடடுக்கு முதன்மை கொடுக்கின்றது. இலக்கிய ஆசிரியரின் முக்கியத்துவத்தை நிராகரிக்கின்றது. ஆசிரியனின் மரணத்தை றோலன் பார்த் என்ற பிரான்சிய பின்னவீனச் சிந்தனையாளர் முதன் முதல் அறிவித்தார். ஒரு படைப்பு உருவாகிய பின் ஆசிரியரனின் ஆளுமைக்கு அங்கு இடமில்லை என்பது இதன் பொருள். வாசகனே இங்கு முக்கியத்தவம் பெறுகிறான். ஒரு இலக்கியப் பிரதியைப் படித்து வாசகன் என்ன பொருள் கொள்கின்றானோ அதுவே அப்பிரதியின் பொருள். அவ்வகையில்
ஒரு பிரதிக்குத் திட்டவட்டமான பொருள் ஒன்று இருக்க முடியாது. ஒவ்வொரு வாசகனும் ஒரே பிரதியைப் படித்து வெவ்வேறு பொருள் கொள்ள முடியும். ஆகவே, ஒரு பிரதியின் பொருள் முடிவற்றது என்றெல்லாம் பின்னவீனவாதம் கூறுகின்றது. பின்னவீனவாதத்தைப் பொறுத்த வரை கம்பராமாயணமும், கல்கியின் சிறுகதை ஒன்றும், ஒரு காதல் கடிதமும், ஒரு சிறு துண்டுப் பிரசுரமும் பிரதிதான். பிரதி என்ற வகையில் இவை தம்முள் சமமானவை. அவ்வகையில், இலக்கியத் தரம், இலக்கிய மேன்மை என்பவற்றுக்குப் பின்னவீன விமர்சனத்தில் இடம் இல்லை எனலாம். ஜனரஞ்சக இலக்கியம், உயர் இலக்கியம் என்ற வேறுபாட்டைப் பின்னவீனவாதம் கடந்த செல்கின்றது.



இலங்கைப் படைப்புகளின் உணர்வுத் தளம் சுய அனுபவங்களைக் கூற விளைவதாகவே பொதுவாகக் காணப்படுகின்றது.இதனால் இலக்கியம் நவீனத்துவம் பெற முடியுமா?


சுய அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனித அனுபவத்தின் அர்த்தத்தைக் காண விளைவது உயர்ந்த கலையின் முக்கிய பண்பாகக் கொள்ளலாம். இது நவீனத்துவத்தின் முக்கிய அம்சமே. ஆனால், நீங்கள் சொல்வது போல் இலங்கைப் படைப்புகளின் இதுவே பிரதான போக்கு என்று எனக்கத் தோன்றவில்லை.இங்கு சுய அனுபவங்களை விட கருத்துக்களை அல்லது கொள்கைகளை முதன்மைப் படுத்தும் போக்கே முனைப்பாகத் தெரிகின்றது.


இலக்கியம் நவீனத்துவம் பெற வேண்டுமாயின் எத்தகைய உத்திகளைப் பயன்படுத்தலாம்?


நவீனத்துவம் உத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. உள்ளடக்கமே பிரதானமானது. உள்ளடக்கம் காலத்தைப் பிரதிபலிப்பதாக, அதாவது நம் காலத்துககுரியதாக இருத்தல் நவீன இலக்கியத்தின் பிரதான பண்பாகும். இன்றைய மனிதர், இன்றைய வாழ்க்கை, இன்றைய நடைமுறை ஆகியவற்றை இன்றைய நோக்கு நிலையில் அணுகுவது முக்கியமானது. தற்காலத்தில் எழுதப்படுவதனாலேயே ஒரு இலக்கியம் தற்காலத்துக்குரியது, நவீனமானது ஆகாது. அதில் தற்காலத்தின் குரல் கேட்க வேண்டும். உதாரணமாக, பாரதியின் கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான பாரதியின் கவிதைகளில் இந்த நூற்றாண்டின் குரலைக் கேட்கிறோம். பாஞ்சாலி சபதம் மகாபாரதத்தி்ல் இருந்து எடுக்கப் பட்ட பழைய கதையே. ஆனாலும் அதில் கூட அடிமைப்பட்ட இந்தியாவின், அடிமைப்பட்ட பெண்களின் குரலையே கேட்கின்றோம். அதனாலேயே பாரதி நவீன கவிஞன் ஆகிறான். அவன் கையாண்ட பாட்டு வடிவங்கள் பெரும்பாலும் பழையவை. ஆனால், பொருள் புதிது, சுவை புதிது, சொற்புதிது.

அதனாலேயே அவனது கவிதைகள் நவ கவிதை அதாவது நவீன கவிதை எனப்படுகின்றன.உத்திகள் ஒவ்வொரு இலக்கிய வடிவத்துக்கும் ஏற்ப வேறுபடலாம்.படைப்பாளியின் நோக்கமும் தேவையுமே அதைத் தீர்மானிக்கும்.


தற்கால இளம் படைப்பாளிகளுக்குக் குறிப்பாக கவிதை எழுதுவோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


வாசிப்பையே நான் அதிகம் வலியுறுத்துவேன். நமது பெரும்பாலான இளம்படைப்பாளிகள், கவிஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. பரந்துபட்ட வாசிப்பு நம் அனுபவத்தை அகலப்படுத்தும். இலக்கிய வடிவங்களிலும் மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியைத் தரும். இத்தகைய இலக்கியத் தாடனமும் மொழிப் பயிற்சியும் இல்லாமல் சிறந்த இலக்கியங்களைப் படைப்பது மிகவும் அரிது. கவிதை எழுதுபவர்களுக்கு பழைய கவிதைகளிலும் புதிய கவிதைகளிலும் பரந்த வாசிப்பு அவசியமாகும். பிறமொழிக் கவிதைகள்படிக்க முடிந்தால் இன்னும் பயனுடையது.மொழிதான் இலக்கியத்தின் கருவி. தன் கருவி பற்றிய அறிவும் அதை லாவகமாகக் கையாளும் திறனும் இல்லாமல் ஒருவர் இலக்கியம் படைக்க முடியாது. இன்று கவிதை என வருகின்ற அனேகமான ஆக்கங்கள் இதனையே நிரூபிக்கின்றன.

(இந்நேர்காணலை ஒருங்கிணைத்துத் தந்த பிரதி அதிபர் ஏ.ஆதம் லெவ்வை அவர்களுக்கும், துணைபுரிந்த திருமதி நுஃமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்)
Thursday, September 10, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்






(பகுதி-1)

(இந்நேர்காணல் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையினால் வருடாந்தம் வெளியிடப்படும் "கலைஅமுதம்"-99 மலரில் இடம்பெற்றது.)

இலங்கையில் 90களின் கவிதைப் போக்கு எவ்வாறு உள்ளது?


ஓரளவு ஆரோக்கியமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். பெருமளவான எண்ணிக்கையில் இளைஞர்கள் கவிதை எழுதத் தொடங்கியுள்ளார்கள். இவர்களுட் பலரிடம் சமூகப் பிரக்ஞை கூர்மையாக உள்ளது. யுத்த அவலம், இன நல்லுறவு, எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உணர்வு போன்றவற்றைப் பலர் தம் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பெண்களின் குரல் கவிதையில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.பல்வேறு மேலை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களின் அனுபவங்கள் கவிதையில் பதிவாகியுள்ளன. உலகக் கவிதைகளைக் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி ஓரளவு விரிவடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க இளம் கவிஞர்களின் கவிதைகள் சில தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பழைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களுட் பலர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டுள்ளனர்.அபாரமான சாதனைகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் நமது கவிதை தேங்கிப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. அவ்வகையில் தொண்ணூறாம் ஆண்டுகள் திருப்தி தருகின்றன.



இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?


90 களில் நம்பிக்கை ஊட்டக் கூடியவர்களாக முன்னணிக்கு வந்த சிலரின் பெயர்கள் உடன் நினைவுக்கு வருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன், அஸ்வகோஸ், ஆத்மா, ஓட்டமாவடி அறபாத், வாசுதேவன், சுல்பிகா. இவர்கள் ஒவ்வொரு தொகுதியையாவது வெளியிட்டுள்ளனர்.நம்பிக்கை தரும் தொகுதிகள் இவை.




கவிதையில் படிமம் , குறியீடு என்பன எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன?



இன்று கவிதை பற்றிப் பேசுபவர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப் படும் ஒரு சொல் படிமம். உவமை, உருவகம், குறியீடு என்பன போல் படிமம் என்பதும் கவிதையின் ஓர் உறுப்பு என்ற வகையில் தான் பலரும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.இது தவறான விளக்கமாகும். உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமங்கள் தான். படிமத்தின் வெவ்வேறு வகைகள் இவை. படிமம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு பொதுச் சொல்.Image, Imagery என்னும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் இது. 1960 கள் வரை இதனைச் சுட்ட தமிழில் கற்பனை என்னும் சொல்லைப் பயன் படுத்தி வந்தார்கள். 1960 களில் எழுத்து பத்திரிகை மூலம் தமிழில் புதுக் கவிதை இயக்கம் வளர்ச்சியடைந்த போது, அதில் சம்பந்தப் பட்டவர்கள் கற்பனை என்பதற்குப் பதிலாகப் படிமம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கவிதை விமர்சனத்தில் இப்போது இச்சொல்லே பெருவழக்காகி விட்டது. கற்பனை என்பதை விட படிமம் என்பது பொருத்தமான சொல்லாகவே தோன்றுகின்றது. சொற்களால் மனதில் தோற்றுவிக்கப் படும் காட்சி அல்லது விம்பமே படிமமாகும். இதனை அகத்தில் தோன்றும் சொல்லோவியம் என்றும் கூறலாம. கவிதை சொற்கள் மூலம் நம் மனதில் பல்வேறு சித்திரங்களைத் தோற்றவிக்கின்றது. இத்தகைய சொற் சித்திரங்கள் மூலமே கவிதை நம்முடன் பேசுகிறது. தன் உட் பொருளை நமக்கு உணர்த்துகின்றது. வேறு வகையில் சொன்னால் கவிதை படிமங்கள் மூலமே நம்முடன் பேசுகின்றது. படிமங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒன்று தான் குறியீடு. உவமை, உருவகம் என்பனவெல்லாம் படிமத்தின் வெவ்வேறு வகைகள். எல்லா வகையான அணிகளும் படிமங்கள் தான். படிமம் என்பது கவிதையின் மொழி எனலாம். அந்தளவுக்குக் கவிதையில் படிமம் முக்கியமானது. இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம்.

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள் - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை.

இது பாரதி தாசனின் கவிதை. இக் கவிதையைப் படிக்கையில் நம் மனதில் ஓவியம் போல் ஒரு காட்சி தோன்றுகின்றது. தாமரைப் பூக்கள் மலர்ந்த குளம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகிய இளம் பெண். அவளைக் கண்டு மனம் பறி கொடுக்கம் ஓர் இளைஞன். இந்தக் காட்சியையே இக் கவிதை வரிகள் சித்திரிக்கின்றன. இந்தச் சித்திரம் முழுவதுமே ஒரு படிமம்தான். இதைக் கூறு படுத்தி மூன்று தனித்தனிப் படிமங்களாகவும் பார்க்கலாம்.

1.தாமரை பூத்த குளம்.
2. முகத் தாமரை தோன்ற முழுகிடும் கோமளவல்லி.
3. அந்தக் கோமள வல்லியைக் கண்டு உள்ளம் கொள்ளை கொடுக்கும் குப்பன்.

இவ்வகையிலே ஒரு கவிதையில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு தொடரும் கூடப் படிமம்தான். இக் கவிதையில் வரும் தாமரை என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். முதல் வரியில் இச்சொல் அதன் நேர் பொருளில் நீர் வளர் தாவரமான தாமரையையும் அதன் பூவையும் சுட்டுகிறது. இதனை ஒரு நேர் படிமம் (Direct Image) எனலாம். அடுத்தவரியில் முகத் தாமரை என உருவகப் பொருள் தருகிறது. இதனை உருவகப் படிமம் (Metaphorical Image) எனலாம்.

கம்பராமாயணத்தில் வரும் வேறு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இராமன் நடந்து வருவதை மிதிலை நகரத்துப் பெண்கள் சன்னல்களைத் திறந்து மலர்ந்த முகத்துடன் எட்டிப் பார்க்கின்றார்கள். இதைக் கம்பன் பின்வருமாறு சித்திரிக்கின்றான்.
"சாளரம் தோறும் பூத்தன தாமரை மலர்கள்"
சன்னல்களில் தாமரை பூக்காது. இங்கு தாமரை பெண்களின் மலர்ந்த முகத்துக்குக் குறியீடு. இதனைக் குறியீட்டுப் படிமம் (Symbolic Image) எனலாம். இவ்வகையில் உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமத்தின் வெவ்வேறு வகைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)